“தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்'.... சென்னையை மீட்டுக் கொடுத்த சிலம்புச் செல்வர் ம.பொ.சி.
சிலம்புச் செல்வர் ம.பொ.சி.யின் பிறந்த நாள் இன்று.
Recommended Video

சென்னை: 1956-ல் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட போது மதராஸ் மனதே என கோஷம் எழுப்பியது ஆந்திரா. ஆனால் தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம் என கர்ஜித்து போராடி சென்னையை மீட்டெடுத்த சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் பிறந்த நாள் இன்று.
தேசத்தின் விடுதலைக்குப் போராடிய கட்டபொம்மனையும் வ.உ.சிதம்பரனாரையும் தமிழ் உலகம் இன்றளவும் நினைவில் வைத்திருக்க காரணமாக இருந்தவர் ம.பொ.சிவஞானம். இவர் எழுதிய நூல்களின் அடிப்படையில்தான் வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் திரைப்படங்கள் உருவாகின.

போற்றுதலுக்குரிய பெருந்தலைவராக திகழ்ந்த ம.பொ.சி, சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் பிறந்தார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த போதும் தேசத்தின் விடுதலையின் மீது அக்கறை கொண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். சுமார் 6 ஆண்டுகாலம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சிறைவாசம் அனுபவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் ஒரு அங்கமாக 1946-ம் ஆண்டு தமிழரசுக் கழகத்தை தொடங்கினார் ம.பொ.சி. சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு என பெயர் சூட்ட வலியுறுத்தி போராடியது தமிழரசு கழகம். 1956-ம் ஆண்டு மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டன. அப்போது சென்னை மாநகரை மதராஸ் மனதே என்ற முழக்கத்துடன் ஆந்திரா உரிமை கோரியது. ஆனால் தலைநகர் சென்னையை தலைகொடுத்தேனும் காப்போம் என சிங்கமென கர்ஜித்தார் ம.பொ.சி.
தமிழகத்தின் வடக்கு எல்லைகளை ஆந்திராவும் தென் எல்லைகளை கேரளாவும் உரிமை கோரின. இதற்கு எதிரான கிளர்ச்சிகளை தீரமுடன் நடத்தியவர் ம.பொ.சி. உள்ளாட்சியிலும் சட்டசபையிலும் திறம்பட பணியாற்றினார். 1978 முதல் 1986 வரை சட்ட மேலவையின் தலைவராகவும் பணியாற்றினார். ம.பொ.சி. எழுதிய மொத்த நூல்கள் 150.
1950-ம் ஆண்டு பேராசிரியர் ரா.பி. சேதுப்பிள்ளைதான் ம.பொ.சி.க்கு சிலம்புச் செல்வர் என பட்டம் வழங்கினார். சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளார். மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது 1972-ம் ஆண்டு ம.பொ.சி.க்கு வழங்கப்பட்டது. 1995-ம் ஆண்டு 89 வயதில் உடல்நலக் குறைவால் ம.பொ.சி. காலமானார்.












Click it and Unblock the Notifications