என்னாச்சு அனிதா குப்புசாமிக்கு அதிமுகவுக்கு டாட்டா சொல்லிவிட்டார்!
பிரபல நாட்டுப்புறப் பாடகி அனிதா குப்புசாமி அதிமுகவில் இருந்து விலகியுள்ளார்.
Recommended Video
சென்னை : பிரபல நாட்டுப்புறப் பாடகி அனிதா குப்புசாமி அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் வேறு எந்த அணியிலும் சேரும் முடிவில் தான் இல்லை என்று கூறியுள்ளார்.
நாட்டுப்புறப்பாடகி, சமையல் கலை வல்லுநர், ஆய்வாளர் என பன்முகத் தன்மை கொண்டவர் அனிதா குப்புசாமி. பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் தமிழ் மொழியில் கிராமியப் பாடல்களை அச்சுபிசகாமல் பாடுவதில் திறமையானவர்.
கர்நாட இசை, நாட்டுப்புறப் பாடல்கள் என்ற மேடைக்கச்சேரிகளில் அனிதா மற்றும் அவரது கணவர் குப்புசாமியின் உற்சாகம் பார்வையாளர்களை குஷிப்படுத்தும். பிரபல நாட்டுப் புறக் கலைஞரும், ஆய்வாளரும், பாடகருமான குப்புசாமியை அனிதா காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
2013ல் அதிமுகவில் சேர்ந்தார்
இசையில் மட்டுமல்ல அரசியலிலும் தனக்கு ஆர்வம் இருக்கிறது என்பதை வெளிக்காட்டும் விதமாக கடந்த 2013ம் ஆண்டில் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார் அனிதா குப்புசாமி. அதிமுகவில் அனிதா இணைந்த சமயத்தில் ஜெயா தொலைக்காட்சியில் சமையல் கலை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார்.
தேர்தல் பிரச்சாரம்
சட்டசபை மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் அதிமுகவிற்காக அனலாக பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார் அனிதா குப்புசாமி. அதிமுகவின் தலைமைக் கழக பேச்சாளராக அனிதா குப்புசாமி வலம் வந்து கொண்டிருந்தார்.
எதிர்க்கட்சிகளுக்கு பாடல் மூலம் விமர்சனம்
அதிமுக மேடைகளில் பாரபட்சமே இல்லாமல் எதிர்க்கட்சிகளை கிழித்து நார்நாராக தொங்கவிடும் வகையில் இருக்கும் இவரது பேச்சுகள். சில நேரங்களில் பாட்டாகவே பாடி அதிமுகவினரை குஷிபடுத்தியுள்ளார் அனிதா.
அனிதா விலகல் அறிவிப்பு
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் இருந்து சிலர் ஒதுங்கியும், சிலர் வெளியேறியும் வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக தான் அதிமுகவில் இருந்து விலகுவதாக அனிதா குப்புசாமி அறிவித்துள்ளார்.
முடிவு செய்யவில்லை
சென்னை ஆர்ஏ புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தான் இனியும் அதிமுகவில் தொடரப்போவதில்லை என்றார். வேறு அணியில் சேரும் எண்ணம் தற்போதைக்கு இல்லை என்றும் அனிதா தெரிவித்துள்ளார்.