சென்னையில் போலீஸ் என கூறி வீடுகளில் கொள்ளையடித்த ஆறு பேர் கைது.. 60 சவரன் நகை பறிமுதல்
வீடுகளில் கொள்ளையடித்த 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை: சென்னையில் போலீஸ் என கூறி வீடுகளில் கொள்ளையடிந்து வந்த மர்ம நபர்கள் ஆறு பேரை ஆவடி போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 60 சவரன் நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை அடுத்த ஆவடி கோவர்த்தனகிரி பகுதியில் கடந்த 8ம் தேதி ஆனந்தன் என்பவது வீட்டிற்கு மர்ம நபர்கள் சிலர் வந்துள்ளனர். அப்போது, தாங்கள் போலீஸ் எனவும் வீட்டை சோதனையிட வந்துள்ளதாகவும் கூறி வீட்டை சோதனையிடுவது போல நாடகமாடினர். பின்னர் பீரோவில் இருந்த 50 சவரன் நகைகளையும் கொள்ளையடித்து சென்றனர்.
இதனை அடுத்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில், காவல்துறையினர் சாலிகிராமம் பகுதியை சார்ந்த குரு என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அவர் தனது நண்பர்கள் விஜயராகவன், லஷ்மணன், கோகும் பிரசாத், மாரிமுத்து, செல்வா ஆகியோருடன் இணைந்து போலீஸ் அதிகாரி போல் நாடகமாடி கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனை அடுத்து குரு அளித்த தகவலின் பேரில் தலைமறைவாக இருந்த ஐந்து பேரையும் கைது செய்த ஆவடி காவல்துறையினர் அவர்களிடமிருந்து 60 சவரன் நகையை பறிமுதல் செய்தனர். மேலும் ஆறு பேர் மீது வழக்கு பதில் செய்த காவல்துறையினர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.