ஸ்லிப் ஆன ஸ்லீப்பர் செல்கள்... தினகரன் நீக்கி விளையாடுவதன் காரணம் இதுதான்
எடப்பாடி பழனிச்சாமி அரசை கவிழ்ப்பதற்கு ஸ்லீப்பர் செல்கள் கைகொடுப்பார்கள் என்று தினகரன் நம்பிக்கொண்டிருந்தார். ஆனால் அவர்கள் ஸ்லிப் ஆனதால் டென்சன் ஆகியுள்ளார் தினகரன்.
Recommended Video

சென்னை: இதுநாள்வரைக்கும் யாரை ஸ்லீப்பர் செல்கள் என்று நம்பிக்கொண்டிருந்தாரோ அவர்கள் எல்லாம் ஸ்லிப்பாகி வருவதால் கட்சியில் இருந்து நீக்கி விளையாடி வருகிறார் டிடிவி தினகரன்.
டிடிவி தினகரன் கடந்த சில வாரங்களாக கட்சியில் இருந்து பலரை நீக்கி வருகிறார். சிலரை மட்டும் நீக்காமல் இருந்தார்.
அவர்கள் எல்லாம் டிடிவி தினகரனின் ஸ்லீப்பர் செல்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் கூட எழுந்தது. அதை உறுதி செய்யும் வகையில் சில அமைச்சர்கள் சசிகலாவிற்கு சாதகமாகவே பேசி வந்தனர்.

பொதுக்குழு செய்த மாற்றம்
பொதுக்குழுவில் ஸ்லீப்பர் செல்கள் தங்களின் வேகத்தை காட்டுவார்கள் என்று எதிர்பார்த்தார் தினகரன். ஆனால் யாரும் எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ்க்கு எதிராக மூச்சு கூட விடவில்லை. இதனால் சிலரை நீக்கி விளையாடியுள்ளார் தினகரன்.

தம்பித்துரை டூ தங்க தமிழ் செல்வன்
அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் மு.தம்பிதுரை அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு, தேனி மாவட்டச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் நியமிக்கப்பட்டுள்ளார்.

பொள்ளாச்சி ஜெயராமன்
அதிமுக தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் நீக்கப்பட்டு, அப்பதவியில் தென்சென்னை மாவட்ட செயலாளர் ஜி.செந்தமிழன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தூசி மோகன்
சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் எஸ்.கே.செல்வம் அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் தூசி.கே.மோகன் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக சி.ஏழுமலை நியமிக்கப்பட்டுள்ளார்.

மாற்றத்தின் பின்னணி
செல்லூர் ராஜூ, ஓ எஸ் மணியன் ஆகியோர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்த டிடிவி தினகரன் திடீரென நடவடிக்கை எடுக்க காரணம் இல்லாமல் இல்லை. தன்னுடைய ஆதரவாளர்கள் என்று தினகரன் நம்பிக்கொண்டிருந்த நிலையில் அவர்கள் ஸ்லிப்பானதுதான் காரணமாம்.

அடக்கி வாசித்த அமைச்சர்கள்
அமைச்சர்கள் எல்லோருமே சசிகலா குடும்பத்தின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தபோதும், ஓ.எஸ் மணியன், செல்லூர் ராஜூ ஆகியோர் வாயே திறக்கவில்லை. தினகரன் மீதோ, சசிகலா மீதோ இதுவரை எந்த விமர்சனத்தையும் அவர் முன்வைக்கவில்லை.

தினகரன் முயற்சி
பொதுக்குழு நடக்கும்வரை திவாகரனுடன் நெருக்கமான தொடர்பில்தான் இருந்தார் மணியன். பொதுக்குழுவுக்குப் பிறகு அவர் யாருடனும் பேசவில்லையாம். சசிகலாவையும், தினகரனையும் எடப்பாடி நீக்கியதும் ஓ.எஸ்.மணியனையும், செல்லூர் ராஜூவையும் தங்கள் பக்கம் இழுக்கலாம் என தினகரன் நினைத்திருக்கிறார்.

கவிழ்க்க முடியாது
முக்கியமான ஒரு நபரின் மூலம் அமைச்சர்களை ரகசியமாக சந்தித்து தூண்டில் போடப்பட்டதாம். ஆனால் அதற்கு மசியவில்லையாம். ஆட்சியை கவிழ்க்கும் மூடில் எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் என யாருமே இல்லை என்பதுதான் உண்மை.

நீக்கிய தினகரன்
இதனையடுத்தே தனது கட்டளைக்கு மசியாத அமைச்சர்களை நிர்வாகிகளை நீக்கியுள்ளார் டிடிவி தினகரன். இதற்கும் அசராத ஓ எஸ் மணியன், நீக்கினா நீக்கிட்டு போகட்டும். இவ்வளவு நாளா என்னை அவரோட ஆளுன்னு ஊரெல்லாம் சொல்லிட்டு இருந்தாங்க. இனி யாரும் அப்படி சொல்ல மாட்டாங்க என்று சொன்னாராம்

ஓ.எஸ் மணியன் கிண்டல்
கோ- ஆப் டெக்ஸ் சிறப்பு விற்பனையைத் தொடங்கி வைத்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய ஓ.எஸ் மணியன், சிறையில் இருக்கும் சசிகலாவின் அனுமதியில்லாமல், கட்சி நிர்வாகிகளை தினகரன் நீக்கி வருகிறார். முதல்வரை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை. டிடிவி தினகரனின் இந்த நடவடிக்கை மூலம் அவருக்கும், எனக்கும் என்ன மாதிரியான உறவு இருக்கிறது என்பதை காட்டியுள்ளார்.

தினகரன் ஜோசியர்
ஜோதிடம் சொல்வது போல தினகரன் பேசி வருகிறார். அடுத்த வாரத்தில் ஆட்சி கவிழும் என்று தினகரன் கூறுவது ஜோசியம் சொல்வது போல உள்ளது என்று எதிர்வினையாற்றுகிறார் ஓ எஸ் மணியன்.

ஆகிட்டாங்களே
ஸ்லீப்பர் செல்கள் என்று நம்பியிருந்த பலரும் ஸ்லிப் ஆன காரணத்தினாலேயே தற்போது அடுத்தவாரம் ஆட்சியை கவிழ்ப்போம் என்று கூறி வருகிறார் டிடிவி தினகரன். அடுத்த வாரத்திற்குள் இன்னும் யார் யாரெல்லாம் குடகில் இருந்து குதித்து ஓடி வரப்போகிறார்களோ தெரியலையே?












Click it and Unblock the Notifications