சினிமாவை மிஞ்சிய அடிதடி பஞ்சாயத்துகளுக்கு காரணமான 'நடிகர் சங்க கட்டிடம்'.. தொடரும் முட்டுக்கட்டை!
நடிகர் சங்க முன்னாள் தலைவர் சரத்குமாரின் பதவியை பறிக்கக் காரணமான நடிகர் சங்க கட்டிடம் அடிக்கல் நாட்டப்பட்டாலும் நீதிமன்றத் தடையால் கட்டுமானப் பணி தடைபட்டுள்ளது.
சென்னை : நடிகர் சங்கத்திற்கு சொந்தமாக கட்டிடம் கட்டப்படும் என்ற வாக்குறுதியளித்து வெற்றி பெற்ற விஷால் அணி தற்போது கோர்ட்டின் தடையால் பணியைத் தொடர முடியாமல் தடுமாற்றம் கண்டுள்ளது.
நடிகர் சங்கத்தின் முன்னாள் நிர்வாகிகளான தலைவர் சரத்குமார், செயலாளர் ராதாரவி, துணைத் தலைவர் காளை மூவரையும் எதிர்த்து விஷால், நாசர் மற்றும் அவரது ஆதரவு நடிகர்கள் எடுத்து வைத்த முதல் அஸ்த்திரமே இந்த நடிகர் சங்க கட்டிடம் தான். எம்ஜிஆரால் நிலம் வழங்கப்பட்டு அவர் காலத்திற்கு பின்னர் சிவாஜி, ரஜினி என பலர் உருக்கிய இடத்தில் சொந்த கட்டிடம் கட்டாமல் தனியார் நிறுவனத்துக்கு குத்தகைக்கு விடுவதாக சரத்குமார் எடுத்த முயற்சி அவருக்கே வினையைத் தேடித் தந்தது.
பிரச்னையை எழுப்பிய குமரிமுத்து
நடிகர் சங்கத்துக்கு சொந்தமான இடத்தில் சங்க கட்டிடம் கட்டாமல் நிலத்தை தனியாரிடம் வழங்கும் முடிவை சரத்குமாரும், ராதாரவியும் தன்னிச்சையாக எடுத்து, அவர்கள் இருவர் மட்டுமே ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக குற்றம்சாட்டி நடிகர் குமரிமுத்து விளக்கம் கேட்டார். ஆனால் குமரிமுத்து நிர்வாகிகளை தரக்குறைவாக பேசினார், சங்கத்துக்கு எதிராக செயல்பட்டார் என குற்றஞ்சாட்டி சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தே அவரை சரத்குமார் நீக்க ஆத்திரமடைந்த குமரிமுத்து நீதிமன்றம் சென்று தன்னை நீக்கியது செல்லாது என உத்தரவை பெற்றார்.
ஆதரவு தெரிவித்த விஷால்
இதனையடுத்து குமரிமுத்துவிற்கு தனது ஆதரவை தெரிவித்த விஷால், குமரிமுத்து நியாயமாக விஷயத்திறக்காக போராடுவதாக தெரிவித்தார். இதனால் சரத்குமார் அணிக்கும் விஷால் அணிக்கும் முட்டல் மோதல் ஆரம்பமானது. பொதுநிகழ்ச்சி ஒன்றில் பொருளாளர் காளை, விஷாலையும் அவரது ஆதரவு நடிகர்களையும் நாய் என்று திட்ட, காளை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஷால் அணி கூறியதை சரத்குமாரும், ராதாரவியும் கண்டு கொள்ளவேயில்லை.
கோர்ட் படியேறிய பூச்சி முருகன்
சங்கத்து நிலத்தை தனியாருக்கு தரும் ஒப்பந்தத்தை எதிர்த்து நடிகர் பூச்சி முருகன் கோர்ட்டுக்கு சென்றார். நடிகர் சங்கம் சார்பில் ஒன்பது பேர் கையெழுத்துப் போட வேண்டிய ஒப்பந்தத்தில் சரத்குமாரும், ராதாரவியும் மட்டுமே கையெழுத்துப் போட்டதால் அந்த ஒப்பந்தம் செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், நடிகர் சங்கத்தில் நடக்கும் எதுவுமே சரியில்லை எனவும் நீதிபதி சந்துரு தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.
சவால் விட்ட விஷால்
இந்த நிலையில் நடிகர் சங்கத்துக்கு தேர்தல் வந்தால் நிச்சயம் சரத்குமாரை எதிர்த்து போட்டியிடுவேன் என்று விஷால் தெரிவிக்க, அவருக்கு ஆதரவாக கார்த்தி, மூத்த நடிகர் நாசர், பொன்வண்ணன் உள்ளிட்டோர் அணி திரண்டனர். தங்கள் அணி வெற்றி பெற்றால் சரத்குமார் அணியின் முறைகேடுகளை வெளியே கொண்டு வருவோம் என்றும் அப்போது அவர்கள் தெரிவித்திருந்தனர்.
பரபரப்பான நடிகர் சங்கத்தேர்தல்
கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற நடிகர் சங்கத் தேர்தல் சட்டமன்ற தேர்தல் போல பரபரப்பை ஏற்படுத்தியது, இறுதியில் விஷால் அணி வெற்றி பெற தலைவராக நாசரும், பொதுச் செயலளாராக விஷாலும், பொருளாளராக நடிகர் கார்த்தியும் தேர்வு செய்யப்பட்டனர். விஷால் அணி பொறுப்பிற்கு வந்ததும் நலிவுற்ற கலைஞர்களுக்கு தேடிச் சென்று உதவுவது, நடிகர் சங்க கட்டிடம் கட்ட தனியார் நிறுவனத்துன் போட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்தது என்று படு ஸ்பீடாக செயல்பட்டனர்.
அடிக்கல் நாட்டு விழா
கடந்த மார்ச் மாதம் 31ம் தேதி சென்னை தியாகராய நகரில் உள்ள அபிபுல்லா சாலையில் ரூ.26 கோடி செலவில் 4 மாடி கட்டிடங்கள் கொண்ட நடிகர் சங்கத்திற்கு சொந்தமான கட்டிடத்தை கட்ட அடிக்கல்நாட்டு விழா நடைபெற்றது. திரையுலகத்தினர் திரண்டு வந்த மகிழ்ச்சியோடு கட்டிடத்திற்கான செங்கல்லை எடுத்து வைத்துவிட்டு சென்றனர். தென்னிந்திய ஜாம்பவான் நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோரும் நேரில் வந்து செங்கல்லை எடுத்து வைத்தனர்.
ஐகோர்ட் தடை
அடுத்த செப்டம்பருக்குள் கட்டிடம் கட்டி முடிக்கப்படும் என்று விஷால் கூறியிருந்த நிலையில், தற்போது உயர்நீதிமன்ற தடை காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அனைத்து அனுமதிகளையும் வாங்கியே கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருவதாக உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்க நடிகர் சங்கம் முடிவு செய்துள்ளது.