சென்னைக் கட்டிட விபத்து : சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு ஜெ. உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: அறுபத்தியோரு கட்டிட தொழிலாளர்களைப் பலிவாங்கிய சென்னைக் கட்டிட விபத்து தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

கடந்த வாரம் சனிக்கிழமை சென்னையில் பெய்த கனமழையில் போரூர் மவுலிவாக்கம் அருகே புதிதாக கட்டிக் கொண்டிருந்த 11 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்து தரை மட்டமானது. இதில் இடிபாடுகளுக்கிடையே சிக்கி 61 கட்டிட தொழிலாளர்கள் பலியானார்கள்.

இடி விழுந்ததே விபத்திற்குக் காரணம் என கட்டுமான நிறுவனம் கூறினாலும், ஏரி நிலத்தில் விதி முறைகளை மீறி 11 மாடிக் கட்டிடம் கட்டியதே விபத்திற்கான முக்கியக் காரணம் என குற்றம் சாட்டப்பட்டது.

இந்நிலையில், இது தொடர்பாக மேற்கொண்டு விசாரணை செய்ய சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை அமைத்துள்ளார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

கட்டிட விபத்து...

கட்டிட விபத்து...

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் வட்டம், போரூரை அடுத்த மவுலிவாக்கத்தில் 28.6.2014 அன்று மாலை தனியாரால் கட்டப்பட்டு வந்த 11 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததையடுத்து, எனது உத்தரவின் பேரில் இடிபாடுகளில் சிக்கியிருந்த கட்டுமானத் தொழிலாளர்களை மீட்டெடுக்கும் பணியிலும்; காயமடைந்தவர்களை அருகிலுள்ள மருத்துவ மனைகளுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கும் பணியிலும்;

மீட்புக் குழு...

மீட்புக் குழு...

சென்னை மாநகரக் காவல் துறை, அதிரடிப்படை, மாநில பேரிடர் மீட்புக் குழு, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழு, மருத்துவத் துறை, நெடுஞ்சாலைகள் துறை, பொதுப் பணித்துறை, வருவாய்த் துறை, சென்னை மெட்ரோ ரயில், சென்னை மாநகராட்சி, நகராட்சிகள் ஆகியவற்றைச் சேர்ந்த பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டு, மொத்தம் 88 பேர் மீட்கப்பட்டனர்.

போர்க்கால நடவடிக்கை...

போர்க்கால நடவடிக்கை...

இவர்களில் 27 நபர்கள் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவ மனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். எஞ்சியுள்ள 61 நபர்கள் உயிரிழந்துள்ளனர். போர்க்கால அடிப்படையில் ஆறு நாட்களாக நடைபெற்ற இந்தப் பணி 4.7.2014 அன்று முடிவுக்கு வந்தது.

சிறப்புக் குழு...

சிறப்புக் குழு...

தனியாரால் கட்டப்பட்டு வந்த 11 மாடி குடியிருப்புக் கட்டடம் இடிந்து விழுந்தது குறித்து, மாங்காடு காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டத்தின் படி பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, இது குறித்து புலன் விசாரணை மேற்கொள்ள ஏதுவாக, காவல் இணை ஆணையர் மேற்பார்வையில் ஒரு சிறப்புக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு புலன் விசாரணையை மேற்கொண்டுள்ளது. கட்டுமான நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர், இயக்குநர், கட்டடக் கலைஞர், கட்டமைப்புப் பொறியாளர் மற்றும் இரண்டு மனைப் பொறியாளர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

சிறப்பு புலனாய்வு குழு...

சிறப்பு புலனாய்வு குழு...

இது குறித்து புலன் விசாரணை மேற்கொள்ள பொறியியல் மற்றும் கட்டடக் கலை தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் தேவைப்படுவதால், சென்னை மாநகரக் காவல் ஆணையரின் ஒட்டுமொத்த மேற்பார்வையில், காவல் இணை ஆணையர் தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பொதுப்பணித் துறை வல்லுநர்கள்...

பொதுப்பணித் துறை வல்லுநர்கள்...

இந்தக் குழுவில், புலனாய்வினை மேற்கொள்ளும் காவல் துறையினருக்கு தொழில்நுட்ப ரீதியாக ஆலோசனை வழங்கவும், வழிகாட்டவும் ஏதுவாக, சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனம், அண்ணா பல்கலைக்கழகம், இதர பல்கலைக்கழகங்கள் மற்றும் பொதுப் பணித் துறையைச் சார்ந்த வல்லுநர்களும் இடம் பெறுவார்கள்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+