சென்னை வந்த இலங்கை விமானத்தின் சக்கரத்தில் திடீர் கோளாறு: 116 பயணிகள் உயிர் தப்பினர்
சென்னை: இலங்கையில் இருந்து சென்னை வந்த விமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டது. விமானியின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் விமானத்தில் பயணம் செய்த 116 பயணிகளும் உயிர் தப்பினர்.
இலங்கையில் இருந்து 116 பயணிகளுடன் இலங்கை விமானம் ஒன்று இன்று அதிகாலை 2.30 மணியளவில் சென்னை வந்தது. சென்னை விமான நிலையத்தில் தரையிறக்க முயற்சித்த போது, விமானத்தின் சக்கரத்தில் பழுது ஏற்பட்டிருப்பதை விமானி கண்டுபிடித்தார். இதனால் விமானம் பெரும் விபத்தை சந்திக்கும் அபாயம் ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு இது தொடர்பாக அவர் தகவல் அளித்தார். பின்னர் மிகவும் முன்னெச்சரிக்கையாக அந்த விமானத்தை அவர் தரையிறக்கினார்.
விமானியின் சாமர்த்தியத்தால் தரையிறங்கிய விமானம் ஓடு பாதையிலேயே நின்றது. அதனைத் தொடர்ந்து அந்த விமானத்தை விமானம் நிற்கும் பகுதிக்கு இழுத்து வந்தனர். பின்னர் அனைத்து பயணிகளும் பத்திரமாக இறக்கி விடப்பட்டனர். விமானியின் சாமர்த்தியத்தால் 116 பயணிகளின் உயிர் காப்பாற்றப் பட்டது.
பின்னர் விமானத்தின் சக்கரங்கள் சரி செய்யப்பட்டு அதிகாலை 4 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம், இரண்டு மணி நேரம் தாமதமாக காலை 6 மணிக்கு இலங்கை புறப்பட்டு சென்றது.