ராஜபக்சே தோற்ற பின்னும் தமிழக மீனவர் பிரச்சினை தீரலையே!: கல்வீசி விரட்டிய கடற்படை
ராமேஸ்வரம்: ராஜபச்சே தோற்றுப்போயி இலங்கை அதிபராக மைத்ரிபால சிறிசேனா பதவியேற்ற பின்னரும் தமிழக மீனவர்களுக்கு விடிவு காலம் வரவில்லை. கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்களை கற்கள், பாட்டில்களைக் கொண்டு தாக்கி விரட்டியடித்துள்ளது இலங்கை கடற்படை.
ராமேஸ்வரத்தில் இருந்து 600க்கும் மேற்பட்ட படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள், கச்சத்தீவு அருகே நேற்றிரவு மீன்பிடித்துக்கொண்டிருந்தனர்.
அப்போது அதிவிரைவு படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர், கற்கள் மற்றும் பாட்டில்களை வீசி தாக்குதல் நடத்தியது. 10க்கும் மேற்பட்ட மீனவர்களின் வலைகளை அறுத்து நாசப்படுத்தியதாகவும் பாதிக்கப்பட்ட ராமேஸ்வர மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை கடற்படையினரின் தாக்குதலில் மீனவர் ஒருவர் காயம் அடைந்ததால், மீன்பிடிக்கச்சென்ற மீனவர்கள் அச்சத்துடன் கரை திரும்பியுள்ளனர்.
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், விரட்டியடிக்கப்படும் தொடர்கதையாகிவருகிறது. அதிபராக மைத்ரிபால சிறிசேனா வெற்றி பெற்ற பின்னர் மீனவர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும் என்று தமிழகத்தில் சில அரசியல் கட்சிகள் கூறிவரும் நிலையில் தமிழக மீனவர்கள் மீண்டும் தாக்கப்படுவது அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியுள்ளது.