செங்குன்றம் அருகே 20 நாட்களுக்கு மேலாக வடியாத வெள்ளம்: தொற்றுநோய் பயத்தில் மக்கள்
சென்னை: செங்குன்றம் அருகே உள்ள பகுதிகளில் 20 நாட்களுக்கும் மேலாக வெள்ளநீர் வடியாமல் உள்ளதால் அங்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
செங்குன்றத்தை அடுத்து உள்ள நல்லூர் ஊராட்சியில் அம்பேத்கர்நகர், காந்திநகர், அன்னை இந்திரா நினைவு நகர், பெருமாளடிபாதம் உள்பட 25க்கும் மேற்பட்ட நகர்கள் உள்ளன. அண்மையில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் அன்னை இந்திரா நகர், அம்பேத்கர் நகரில் உள்ள தாழ்வான பகுதிகளில் இருக்கும் வீடுகளில் 75 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கிவிட்டன.
அன்னை இந்திரா நகரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியும் வெள்ளத்தில் மூழ்கியது. வெள்ளத்தில் மூழ்கிய வீடுகளைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் உள்ள திருமண மண்டபங்கள், கோவிலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தன்னார்வலர்களும், தொண்டு நிறுவனங்களும் உணவு, குடிநீர் வழங்கி வருகின்றார்கள்.
அந்த பகுதியில் உள்ள வீடுகளை சூழ்ந்துள்ள வெள்ளநீர் 20 நாட்களுக்கும் மேலாக வடியாமல் உள்ளது. அந்த நீரில் வளர்ப்பு பிராணிகள் இறந்து மிதக்கின்றன. தேங்கிய நீர், அதில் பிராணிகள் இறந்து மிதப்பதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.
இதனால் அங்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தால் மூழ்காமல் இருக்கும் வீடுகளில் உள்ளவர்களுக்கு ஏற்கனவே தொற்று நோய் பரவி வருகின்றது.
அரசோ, ஊராட்சி நிர்வாகமோ எந்த உதவியும் செய்யவில்லை. மாவட்ட கலெக்டர் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு வெள்ளநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.