நீட் தேர்வு.. பெற்றோர், மாணவர்களின் துன்பங்களுக்கு அதிமுகவே பொறுப்பு.. மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு
நீட் தேர்வில் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்கள் மற்றும் பெற்றோரின் துன்பங்களுக்கு அதிமுகவே பொறுப்பேற்க வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை: தமிழகத்தில் உள்ள மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் நீட் தேர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் உடனடியாக நீட் தேர்வு தொடர்பாக தமிழக ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கோரியுள்ளார்.
நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது தொடர்பான சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். அதற்கு முறையான பதில் அமைச்சரிடம் இருந்து வரவில்லை என்று கூறி திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
வெளிநடப்பிற்கு பின் செய்தியாளர்களிடம் மு.க. ஸ்டாலின் கூறியதாவது:
கொடுமை
மாநிலத்தில் உள்ள மாணவர்கள் நீட் தேர்வால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் பெற்றோர்கள் பல துன்பங்களுக்கு ஆளாகியுள்ளனர். தமிழ்நாட்டில் நிலவும் இந்தக் கொடுமைகளுக்கு முடிவு கட்ட வேண்டும். நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.
அழுத்தம் போதவில்லை
ஜனாதிபதி தேர்தலை நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற பயன்படுத்தி இருக்க வேண்டும். பாஜக வேட்பாளரை அதிமுக அரசு ஆதரித்தது. அப்போது, நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்திருக்கலாம். ஆனால் அதிமுக அரசு அதனை செய்யத் தவறிவிட்டது.
அமைச்சரிடம் பதில் இல்லை
தற்போது துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையாவது பயன்படுத்தி நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரிக்கை வைக்க வேண்டும். இதற்கெல்லாம் சட்டசபையில் முறையான பதிலை அமைச்சர் தரவில்லை.
மக்கள் நலனில் அக்கறை இல்லை
சரியான நேரத்தில் ஜனாதிபதி கையில் நீட் சட்ட மசோதா சென்றிருந்தால் நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு கிடைத்திருக்கும். தமிழ்நாட்டின் மக்கள் நலன் கருதி அமைச்சர்கள் செயல்படவில்லை. அவர்களின் நலன் கருதி செயல்படுகிறார்கள் என்று ஸ்டாலின் கூறினார்.