மெட்ரோ ரயில் சேவையை தனியார் மயமாக்க அதிமுக முயற்சி: ஸ்டாலின் கண்டனம்
மெட்ரோ ரயில் சேவையை தனியார் மயமாக்க முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை: மெட்ரோ ரயில் சேவையை தனியார் மயமாக்கும் அதிமுக அரசின் முயற்சி கடும் கண்டனத்துக்குரியது என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், ''மெட்ரோ ரயில் சேவையை தனியார் மயமாக்கும் அதிமுக அரசின் முயற்சி கடும் கண்டனத்துக்குரியது. திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை, மோனோ ரயில் திட்டம் கொண்டு வருவதாகக் கூறி அதிமுக அரசு கிடப்பில் போட்டது. திமுக நடத்திய போராட்டத்தால் மெட்ரோ ரயில் திட்டம் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.
மக்களுக்கு போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தித் தருவது ஓர் அரசின் கடமையாகும். இந்த கடமையை மறந்துவிட்டு மெட்ரோ ரயில் சேவையை தனியார் மயமாக்க முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது. எனவே, இந்த முயற்சியை அதிமுக அரசு கைவிட வேண்டும்.
மெட்ரோ ரயில் சேவையை தனியார் மயமாக்க வேண்டும் என்பதற்காகத்தான் அதிக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டதா? என்ற கேள்வி எழுகிறது. கட்டணத்தை குறைக்க முடியாது எனக் கூறிய அதிமுக அரசு, மெட்ரோ ரயில் சேவையை தனியார் மயமாக்க வேகம் காட்டி வருவது மக்களை ஏமாற்றும் செயலாகும்'' என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.