பாடகர் கோவனின் ஜாமீனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு: மு.க.ஸ்டாலின் கண்டனம்
சென்னை: டாஸ்மாக்கு எதிராக பாடல் இயற்றிய பாடகர் கோவனின் ஜாமீனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளதற்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் முகநூல் பதிவில் கூறியிருப்பது:
''பாடகர் கோவனுக்கு போலீஸ் காவல் வழங்க மறுத்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து அதிமுக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருப்பது அதிமுக அரசின் எதேச்சாதிகார மனப்பான்மையை மீண்டும் ஒரு முறை வெளிப்படுத்தியிருக்கிறது. அதிமுக அரசு திறந்த டாஸ்மாக் கடைகளை மூடக் கோரியும், மதுக்கடைகளைத் திறந்துள்ள முதல்வரை விமர்சித்தும் "மக்கள் அதிகாரம்" என்ற அமைப்பின் கலைக்குழுவைச் சேர்ந்த 54 வயதான கோவன், "மூடு டாஸ்மாக்கை- மூடு" என்று பாடல் பாடினார்.
அதற்காக கோவன் மீது தேசத்துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு கடந்த அக்டோபர் 30 ஆம் தேதியன்று கோவன் திருச்சியில் கைது செய்யப்பட்டார். அவர் சிறையிலிருக்கும் போது அவரை போலீஸ் காவலில் எடுக்க காவல்துறை மனு தாக்கல் செய்தது. அது தொடர்பான மனு உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.
அப்போது "கோவனுக்கு நக்ஸலைட் இயக்கங்களுடன் தொடர்பு இருக்கிறது" என்று அரசு வழக்கறிஞர் எடுத்து வைத்த குற்றச்சாட்டிற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்றும், "உச்சநீதிமன்றமே ரத்து செய்து விட்டு தகவல் தொழில்நுட்பச் சட்டப்பிரிவு 66அ-யின் கீழ் எப்படி வழக்குப் போட்டீர்கள்" என்றும் கடும் கண்டனத்தைத் தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம் கோவனை போலீஸ் காவலில் அனுப்ப முடியாது என்று நவம்பர் 7 ஆம் தேதி உத்தரவிட்டது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை மதிக்காமல் இப்போது உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறது அதிமுக அரசு. இந்த மேல் முறையீடு அதிமுக அரசின் ஆணவப் போக்கையும், தன்னிச்சையான போக்கையும் வெளிப்படுத்துகிறது. கோவன் கைதிற்கு அனைத்து தரப்பு மக்களும் எதிர்ப்பு தெரிவித்து விமர்சித்த பிறகும் அவரை எப்படியாவது கைது செய்ய வேண்டும் என்று துடிக்கிறது அதிமுக அரசு.
கருத்து சுதந்திரத்தின் அடிப்படையில் அரசுக்கு எதிரான விமர்சனங்களை முன் வைப்போர் மீது காவல்துறையின் அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு மிரட்டுகிறது அதிமுக அரசு. மாநிலத்தில் நாள்தோறும் சீரழிந்து வரும் சட்டம் ஒழுங்கை பராமரிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் காவல்துறையை, அரசியல் சட்டம் வழங்கிய கருத்துச் சுதந்திரத்தின் மீதான தாக்குதலுக்கு தாராளமாக அதிமுக அரசு பயன்படுத்துவது கடும் கண்டனத்திற்குரியது.
கருத்துச் சுதந்தித்தின் மீது இனியாவது இது போன்ற அராஜகத்தில் ஈடுபடாமல், அடக்கு முறைகளை ஏவி விடாமல், மக்களின் நலனுக்கும், முன்னேற்றத்திற்கும் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதில் ஆர்வம் காட்டுமாறு அதிமுக அரசை கேட்டுக் கொள்கிறேன் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.