விக்னேஷின் தீக்குளிப்பே கடைசியாக இருக்கட்டும்.. மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
சென்னை: காவிரி நீர் பிரச்சனைக்காக உயிர் தியாகம் செய்துள்ள இளைஞர் விக்னேஷின் எண்ணத்திற்கும் தியாகத்திற்கும் வீரவணக்கம் செலுத்தும் அதே நேரத்தில் இதுவே கடைசித் தீக்குளிப்பாக இருக்கட்டும் என்று தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழ் இளைஞர் சமுதாயத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து சென்னையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடைபெற்ற பேரணியில் விக்னேஷ் என்ற இளைஞர் தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்டார்.
இதுகுறித்து ஸ்டாலின் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: காவிரியில் தமிழகத்தின் உரிமையைப் பாதுகாக்கவும், கர்நாடகாவில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறைகளைக் கண்டித்தும் ஒட்டுமொத்த தமிழகமும் திரண்டு நடத்திய கடையடைப்பு வெற்றி பெற்றுள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர் காவிரி உரிமைக்காகத் தீக்குளித்து, தன்னைத்தானே மாய்த்துக் கொண்டிருப்பது அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.
அந்த இளைஞரின் எண்ணம் உயர்வானது. அவரது செயல்பாடு துணிவானது. அவரது தியாகம் போற்றத்தக்கது. எனினும், இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்து, போராடி, சாதித்து உரிமைகளைப் பெற வேண்டிய வயதில் தீக்குளித்து உயிரைத் துறப்பது என்பது அவர் அடைய வேண்டிய இலட்சியத்தை அடைய முடியாமல் செய்து விடுகிறது.
இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போர் தொடங்கி, ஈழ விடுதலைப் போர் வரை தமிழர்கள் பலர் தங்கள் இன்னுயிரை தாமாகவே ஈந்து போராட்டக் களத்தில் உணர்வலைகளை உருவாக்கியிருக்கிறார்கள். அவர்களின் உயிர்த் தியாகங்கள் இன்றளவும் மதிக்கப்படுகிற போதும், அந்த வழிமுறையை தலைவர்கள் யாரும் ஏற்றுக் கொள்வதுமில்லை. ஆதரிப்பதுமில்லை.
இளைஞர் விக்னேஷின் வழிமுறையை நாம் ஆதரிக்க முடியவில்லையென்றாலும் அவரது எண்ணத்திற்கும் தியாகத்திற்கும் வீரவணக்கம் செலுத்தி, இதுவே கடைசித் தீக்குளிப்பாக இருக்கட்டும் எனத் தமிழ் இளைஞர் சமுதாயத்தைக் கேட்டுக் கொள்கிறேன் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.