பணப்பட்டுவாடா புகாரில் சிக்கியுள்ள முதல்வர், அமைச்சர்கள் மீது வழக்கு பதிய மு க ஸ்டாலின் கோரிக்கை
ஆர்.கே. நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா புகாரில் சிக்கியுள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் மீது வழக்கு பதிய வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: பணப்பட்டுவாடா புகாரில் சிக்கியுள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்கு பதிய வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
ஆர்கே.நகர் தொகுதிக்கு வரும் 12ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் தங்களின் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தன. மேலும், அந்தப் பகுதியில் பணப்பட்டுவாடா பெரிய அளவில் நடைபெற்றதாக புகார் எழுந்தது.

இந்நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு உட்பட 35க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு நடத்தினர். இதில் 89 கோடி ரூபாய் வரை ஆர்கே நகரில் செலவு செய்ததற்கான ஆவணம் சிக்கியது. மேலும், முதல்வர் பழனிச்சாமி மற்றும் அமைச்சர்களும் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்கான பணத்தை பெற்றது அம்பலமாகியுள்ளது.
இதன் அடிப்படையில், இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், பணப்பட்டுவாடா புகாரில் சிக்கியுள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் மீது வழக்குத் தொடர வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
அதிமுக ஆட்சி நீடிக்கும் வரை பணவிநியோகம், அதிகார துஷ்பிரயோகம் சீராகப் போவதில்லை என்று கூறியுள்ள ஸ்டாலின், தேர்தலை தள்ளி வைப்பதற்கு காரணமான காவல் துறையினர் மற்றும் தேர்தல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் இவ்வளவு பறக்கும் படைகள் இருந்தும் பணவிநியோகம் தங்கு தடையின்றி எப்படி நடந்தது என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications