அப்பா வழியில்... பழங்கதைகளைப் பேசி தொண்டர்களைக் கவரும் ஸ்டாலின்
சென்னை: தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வரும் திமுக பொருளாளர் ஸ்டாலின், தனது தந்தையும், திமுக தலைவருமான கருணாநிதியைப் போன்றே பிரச்சாரக் கூட்டங்களில் பேசி வருவது அக்கட்சித் தொண்டர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
தமிழகத்தில் அடுத்தமாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையொட்டி திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக பொருளாளர் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி, தனது பிரச்சார உரைகளில் தனது தந்தையான திமுக தலைவர் கருணாநிதியின் வழியைப் பின்பற்றத் தொடங்கியுள்ளார் அவர்.
அதாவது, திமுக பொதுக்கூட்டம், தேர்தல் பிரச்சாரக் கூட்டம், மாநாடு போன்றவற்றில் கலந்து கொள்ளும் போது, அப்பகுதி திமுக தலைவர்களுடனான தனது நட்பு, அவர்களின் குணங்கள் போன்றவற்றைப் பற்றி பேசியே கருணாநிதி தனது பேச்சைத் தொடங்குவார். தங்கள் பகுதி தலைவர்களைப் பற்றி திமுக தலைவரின் பேச்சுக்கு மக்களிடையே எப்போதும் வரவேற்பு அதிகமாகவே இருக்கும்.
அந்தவகையில், தற்போது கருணாநிதியின் வெற்றிப் பேச்சு பார்முலாவைத் தானும் பின்பற்றத் தொடங்கியுள்ளார் ஸ்டாலின். அவர் தனது சமீபத்திய பிரச்சாரக் கூட்டங்களில் அப்பகுதி தலைவர்கள் மற்றும் தனது பயணங்கள் பற்றிப் பேசியே உரையைத் தொடங்குகிறார்.
உதாரணமாக கரூர் மாவட்டம், குளித்தலையில் நடைபெற்ற பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், தனது பேச்சின் இடையே, தான் மேற்கொண்ட நமக்கு நாமே பயணத்தின் ஒரு கட்டமாக கரூர் மாவட்டத்துக்கு வந்தபோது யார் வீட்டில் சாப்பிட்டேன், யார் வீட்டில் ஓய்வெடுத்தேன், யார் யார் அருகிலிருந்தார்கள் என்பதையெல்லாம் வரிசையாக நினைவுபடுத்திக் கூறினார்.
இதனை, மேடையில் இருந்த நிர்வாகிகள் மட்டுமின்றிகூட்டத்தில் திரண்டிருந்த மக்களும் பெரிதும் ரசித்தனர்.
தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்னரே நமக்கு நாமே என்ற பெயரில் தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.