கூட்டணிக்காக மு.க. ஸ்டாலினிடம் கடைசிவரை போராடிப் பார்த்த ப.சிதம்பரம்
சென்னை: லோக்சபா தேர்தலில் எப்படியாவது திமுகவுடன் கூட்டணி வைத்துவிட வேண்டும் என்பதற்காக காங்கிரஸின் அனைத்து முயற்சிகளுமே ஸ்டாலினால் முறியடிக்கப்பட்டுவிட்டது. கடைசிகட்ட முயற்சியாக நேற்றும்கூட ஸ்டாலினை ப.சிதம்பரம் தொடர்பு கொண்டு பேசியும் அதுவும் நிராகரிக்கப்பட்டுவிட்டது.
ஈழத் தமிழர் பிரச்சனையில் மத்திய அரசில் இருந்து திமுக வெளியேறவும், காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேறவும் காரணமாக இருந்தவர் மு.க. ஸ்டாலின். அதன்பின்னர் திமுக பொதுக்குழுவில் காங்கிரஸ்- பாஜகவுடன் கூட்டணியே கிடையாது என்று அறிவிக்கச் செய்தவும் ஸ்டாலின்தான்.
ஆனாலும் கனிமொழி, தயாநிதி, அழகிரி அணி திமுக- காங்கிரஸ் கூட்டணிக்கு எவ்வளவோ போராடிப் பார்த்தது. ஆனால் ஸ்டாலினோ பொதுக்குழுவிலேயே முடிவு எடுத்துவிட்டோம் அதை மீறமுடியாது என்பதில் திட்டவட்டமாக இருந்தார்.
ஸ்டாலின் திட்டவட்டம்
இதைத்தான் திருச்சி மாநாட்டிலும் திட்டவட்டமாக தெரிவித்தார். திண்டுக்கல் ஐ.பெரியசாமி வீட்டு திருமண நிகழ்ச்சியிலும் பேசினார். இப்போதும் காங்கிரஸை சேர்க்கவே கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்.
சோனியா பேச்சு
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில் மு.க.ஸ்டாலின்தான் முட்டுக்கட்டை என்பதை உணர்ந்து அக்கட்சியின் பிரபு, சோனியாவையும் பேச வைத்துப் பார்த்தார். ஆனாலும் ஸ்டாலின் பிடிகொடுக்கவில்லை.
ப.சிதம்பரம் முயற்சி
பின்னர் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மூலம் பேசிப் பார்த்தது காங்கிரஸ். ஆனாலும் ஈழத் தமிழர் பிரச்சனையில், தமிழக உரிமை பிரச்சனையில் காங்கிரஸ், மத்திய அரசின் செயல்கள், திமுகவை பழிவாங்கியது என ஒரு பட்டியலையே போட்டு எப்படி காங்கிரஸுடன் கூட்டணி அமைப்பது என்று எதிர்கேள்வி எழுப்பியிருந்தார்.
மீண்டும் ப.சி. பேச்சு
ஆனாலும் விடாத கறுப்பாக நேற்று கூட ஸ்டாலினை ப.சிதம்பரம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியிருப்பதாக கூறப்படுகிறது. மீண்டும் ஸ்டாலின் காங்கிரஸ் எப்படியெல்லாம் தமிழகத்துக்கு எதிராக இருக்கிறது.. மக்களின் மனநிலை எப்படியெல்லாம் இருக்கிறது என்று விவரிக்க எதுவும் பேசாத நிலைக்குப் போய்விட்டார் ப.சிதம்பரம்.
பாஜகவை ஆதரிப்பதில்லை- ஸ்டாலின்
ப.சிதம்பரத்துக்கு ஒரே ஒரு ஆறுதலாக, லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் உறுதியாக பாரதிய ஜனதாவை ஆதரிக்க மாட்டோம் என்றும் ஸ்டாலின் கூறியிருக்கிறார். ப.சிதம்பரமும் சரி மேலிடத்துக்கு தெரிவிக்கிறேன் என்று கூறி அமைதியாகிவிட்டாராம்.