சைக்கிளில் 'டபுள்ஸ்', எம்.ஜி.ஆர். படம் பார்க்க நினைத்து, போலீஸிடம் சிக்கி.. ஸ்டாலின் நினைவுகள்
திருவண்ணாமலை: பள்ளியில் படித்து வந்த காலத்தில் எம்.ஜி.ஆர் படம் பார்க்க சைக்கிளில் எனது நண்பருடன் டபுள்ஸ் போனேன் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
திருவண்ணாமலை வந்த மு.க.ஸ்டாலின் அங்கு நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது மலரும் நினைவு ஒன்றை மாணவர்கள் மத்தியில் அவர் பகிர்ந்து கொண்டார்.

ஸ்டாலின் பேசுகையில், கடந்த 1967ம் ஆண்டு பள்ளியில் படித்த சமயத்தில், நான் எம்.ஜி.ஆரின் பரம ரசிகனாக இருந்தேன். அவர் நடித்த படத்தை ரிலீஸ் நாளில் முதல் நாள் முதல் காட்சியிலேயே பார்க்க வேண்டும் என நினைப்பவன் நான்.
அப்போது புதியபூமி படம் வெளியானது. சென்னை குலோபஸ் சினிமா தியேட்டரில்தான் படம் ரிலீஸாகியிருந்தது. முதல் காட்சியைப் பார்ப்பதற்காக நண்பருடன் சைக்கிளில் டபுள்ஸ் போனேன். அப்போது டபுள்ஸ் போனால் குற்றமாகும். இதனால் என்னை போலீஸார் பிடித்துச் சென்றனர்.
பெயர் விவரங்களை கேட்டனர். நானும் எனது தந்தை பெயர் கருணாநிதி, கோட்டையில் பொதுப்பணித்துறை அமைச்சராக வேலை செய்கிறார் என்றேன். உடனே போலீசார், இதை முன்பே சொல்லக் கூடாதா எனக் கூறினர். அப்போதும் நான், வழக்கு பதிவு செய்யுங்கள், அபராத கட்டணத்தை செலுத்திவிட்டு போகிறேன் என்றேன். பெருமைக்காக இதை சொல்லவில்லை. அன்றும் இன்றும் கடமை தவறாமல் நடந்து கொள்கிறேன் என்றார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications