ரோட்டுக்கடையில் தோசை டேஸ்ட் பார்த்துக்கொண்டே குறை கேட்ட ஸ்டாலின்…
கோவை: மேட்டுப்பாளையம் பகுதியில் நமக்கு நாமே பயணம் மேற்கொண்ட ஸ்டாலின் ரோட்டோர கடையில் தோசை சாப்பிட்டுக் கொண்டே மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். சாலையில் நடந்து சென்ற போது பேருந்தில் இருந்த பயணிகளுக்கும், ஆட்டோ டிரைவருக்கும் கை கொடுத்து அவர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார்.
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கோவை புறநகர் பகுதியான மேட்டுப்பாளையம் அண்ணாஜிராவ் காய்கறி மார்க்கெட் பகுதியில் இன்று காலை நமக்கு நாமே விடியல் மீட்பு பயணத்தை தொடங்கினார். அங்கிருந்து அண்ணாஜி ராவ் ரோடு, பங்களா மேடு, காரமடை ரோடு ஆகிய பகுதிகளில் நடந்து சென்று காய்கறி வியாபாரிகள், பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது மாற்று திறனாளிகள் நலச்சங்கத்தின் சார்பில் கோவை மாவட்ட செயலாளர் ஷேக்பரித்துல்லா, மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை மனு கொடுத்தார். அதைப்பார்த்த ஸ்டாலின் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
கை கொடுத்த ஸ்டாலின்
தொடர்ந்து ஸ்டாலின் ரோட்டில் நடந்து வந்தார். அப்போது வயதான மூதாட்டியை பார்த்து நலம் விசாரித்தார். ஆட்டோ டிரைவர், பஸ் டிரைவர் மற்றும் பயணிகளிடம் கை குலுக்கினார்.
பேருந்தில் பயணம்
நடந்து சென்ற ஸ்டாலின் திடீரென அருகில் வந்து நின்ற பேருந்தில் ஏறி பயணித்தார். அப்போது பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
ரோட்டுக்கடை தோசை
காரமடை ரோட்டில் உள்ள ஒரு ரோட்டோர கடைக்கு டீ குடிக்க சென்றார். அப்போது டீ இல்லாததால் கடையில் ஒரு தோசை வாங்கி சாப்பிட்டு விட்டு கடைக்காரரான மலர்க்கொடி கண்ணன் என்பவருக்கு 100 ரூபாய் கொடுத்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
விவசாயிகளிடம் குறை கேட்பு
காரமடை பாக்கு விவசாயிகள், கருவேப்பிலை மற்றும் வாழை விவசாயிகளிடம் குறைகளை கேட்டு மனுக்களை பெற்றார். அப்போது அவர்களிடம் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் உங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றார்.
தொழிலாளர்களிடம் குறை கேட்பு
அங்கிருந்து புறப்பட்ட மு.க.ஸ்டாலின் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வீரபாண்டி பிரிவு சர்ச் மண்டப வளாகத்தில் கைத்தறி, பொறியியல், கண்ணாடி, வண்ணம் பூசுதல் மற்றும் கட்டிட தொழிலாளர்களை சந்தித்து பேசினார். தொழிலாளர்கள் பலரும் தங்களின் குறைகளை ஸ்டாலினிடம் முறையிட்டனர். தனியார் நிறுவனத் தொழிலாளருக்கு நலவாரியம் அமைக்க கோரிக்கை விடுத்த அவர்கள், கோவையில் மேம்பாலங்கள் அமைத்து சிங்கார கோவையாக மாற்ற கோரிக்கை விடுத்துள்ளனர். கைத்தறி நெசவுத் தொழிலாளருக்கு இலவச மின்சாரம் முறைப்படுத்தி வழங்க கோரியும், தொழிலார்கள் கோரிக்கை மனுவை அளித்தனர்.
மென் பொருள் பணியாளர்கள்
இதைத்தொடர்ந்து சரவணம்பட்டி பகுதிக்கு வந்த மு.க.ஸ்டாலின் கே.ஜி.ஐ.எஸ்.எல். வளாகத்தில் மென்பொருள் பணியாளர்களடன் கலந்துரையாடினார். இதனைத் தொடர்ந்து மதியம் கண்ணம் பாளையம் விசைத்தறியாளர்களை சந்தித்து பேசினார்.
முடியட்டும் விடியட்டும்
தமிழகத்தில் கடந்த நான்கரை ஆண்டு கால அதிமுக ஆட்சியில் புதிய தொழிற்சாலைகள் எதுவும் வரவில்லை. தமிழக மக்கள் கடந்த நான்கரை ஆண்டுகாலமாக அனுபவித்து வந்த கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது. திமுகவுக்கு உறுதுணையாக இருந்து, சிறப்பான வெற்றி தேடி தாருங்கள். முடியட்டும் ஜெயலலிதா ஆட்சி, விடியட்டும் திமுக ஆட்சி.
ரெஸ்ட் ஜெயலலிதா
கடந்த 10 நாட்களாக சிறுதாவூர் பங்களாவில் ஜெயலலிதா ஓய்வெடுக்கிறார். ஆனால், அவர் செயல்பாட்டில் இருப்பதுபோல் பத்திரிகைகளில் படம் வந்துகொண்டிருக்கிறது. பழைய படங்களை எடுத்து இப்போது நடப்பதுபோல் வெளியிடுகிறார்கள். ெஜயலலிதா, தற்போது கோடநாடு பங்களாவுக்கு வருவதில்லை. இங்கு வந்துவிட்டு போனபிறகுதான் அவருக்கு பெங்களூர் கோர்ட்டில் 4 ஆண்டு சிறை தண்டனை கிடைத்தது. அதனால், ராசி இல்லை எனக்கூறி கோடநாடு பங்களாவுக்கு வருவதில்லை என்றார் ஸ்டாலின்.