ஈவிகேஎஸ் இளங்கோவன் மிகவும் தைரியமானவர்.. ஸ்டாலின் புகழாரம்!
ஈவிகேஎஸ் இளங்கோவன் மிகவும் தைரியமானவர் என ஸ்டாலின் புகழ்ந்து பேசி இருக்கிறார்.
சென்னை: ஈவிகேஎஸ் இளங்கோவன் மிகவும் தைரியமானவர் என ஸ்டாலின் புகழந்து பேசி இருக்கிறார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இளங்கோவன் விழாவில் கலந்து கொள்வது திமுக கட்சி விழாவில் கலந்து கொள்வது போல இருக்கிறது என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டு இருக்கிறார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தனது பிறந்தநாள் விழாவை சென்னை வேலப்பன்சாவடியில் கோலாகலமாக கொண்டாடினார். தமிழ்நாட்டில் இருக்கும் பல முக்கிய கட்சிகள்இதில் கலந்து கொண்டன. கிட்டதட்ட பாஜக கட்சிக்கு எதிரான மதசார்பற்ற இயக்கம் போல இந்த பிறந்த நாள் விழா நடந்தது.
இந்த விழாவில் ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்பு உரையாற்றினார். அதில் அவர் ''தமிழ்நாட்டில் அனைவரும் தந்தை பெரியார் அவர்களை 'தந்தை' என்று அடைமொழி வைத்து அழைக்கிறோம். அதேபோல் நாம் ஈவிகேஎஸ் இளங்கோவனை 'தாத்தா' என்று தான் அழைக்கலாம். அவர் என்னை விட மொத்தமாக 6 வயது மூத்தவர். இந்த விழா காங்கிரஸ் சார்பில் நடந்தாலும் திமுக கட்சி விழா போன்ற நெருக்கமான உணர்வே எனக்கு ஏற்படுகிறது'' என்று குறிப்பிட்டார்.
மேலும் '' ஈவிகேஎஸ் இளங்கோவன் வேண்டும் என்றால் கதர் சட்டை அணிந்தவராக இருக்கலாம். ஆனால் எப்போதும் அவர் திராவிட இயக்கத்தின் பின்புலத்தை கொண்டவர்தான். பா.சிதம்பரம் சொன்னதுபோல அவர் எதை குறித்தும் நினைக்காமல் மிகவும் தைரியமாக செயல்படகூடியவர். அவர் மிகவும் துணிச்சல் மிக்கவர்'' என்றும் குறிப்பிட்டார்.
அதேபோல் ''அவர் எனக்கு பல முறை நம்பிக்கை தரும் வகையில் பேசி இருக்கிறார். இந்த பிறந்த நாள் விழா வெறும் விழா மட்டும் இல்லை. இது காங்கிரஸ் கட்சியின் எழுச்சி மாநாடு. இதில் இருந்து காங்கிரஸ் மீண்டும் புத்துயிர் பெற்று வளர்ச்சி அடையும்'' என்றும் குறிப்பிட்டார்.