எல்லோரும் கூட்டணிக்கு வந்துருங்க.. ஸாரி கல்யாணத்துக்கு வந்துருங்க.. இது ஸ்டாலின் ஸ்டைல்!
சென்னை: அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை நண்பனும் இல்லை என்பார்கள். அது உண்மைதான் என்று ஒவ்வொருமுறையும் உணர்த்துகின்றனர் நம் அரசியல் தலைவர்கள். நேற்றுவரை எலியும் பூனையுமாய் இருந்தவர்கள் சட்டென்று கைகுலுக்கி, சில நேரங்களில் கட்டிபிடித்து போட்டோவிற்கு போஸ் கொடுப்பதும்.
எதை சாக்காக வைத்து சந்திப்பது என்று யோசித்து இருக்கவே இருக்கிறது முல்லைப் பெரியாறு அணை, காவிரி நதிநீர் பிரச்சினை இப்போது புதிதாக மேகதாது அணை பிரச்சினை அதை வைத்து சந்திப்போம் என்று எதிர்கட்சிகளை ஒன்றாக அணைத்து கடந்த சில வாரங்களுக்கு முன்னர் டெல்லிக்கு அழைத்து போனார் விஜயகாந்த். அடடா இது நல்லா இருக்கே... எதிர்கட்சித்தலைவருக்கான வேலையை சரியாக செய்கிறாரே என்றெல்லாம் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
24 மணிநேரம் கூட தாங்கவில்லை. செய்தியாளர்கள் சந்திப்பில் விஜயகாந்த் செய்த கூத்துக்கு எல்லாம் புஸ் ஆகிப் போனது. இது தானாக நடந்ததா இல்லை யாரும் தள்ளிவிட்டு நடந்ததா என்ற கேள்விக்கெல்லாம் போகவேண்டாம் எப்படியோ நடந்து விட்டது.
திமுக- தேமுதிக
திமுகவை நெருங்குகிறது தேமுதிக கூட்டணி உறுதி என்றெல்லாம் செய்தி வெளியானது. இதை ஆமோதிப்பது போல ஸ்டாலினும் பேசினார். எல்லாம் சில நாட்கள்தான் இந்த கூட்டணிக்கு உத்தம வில்லனாக ஜி.கே.வாசன் இருக்கிறார் என்ற பேச்சு அடிபட்டது.
உத்தம வில்லன் வாசன்
நாம் இருவரும் எப்போதும் ஒரே அணியில் இருக்கவேண்டும் என்கிற அவசியம் இல்லை. ஆனால் எந்த அணியில் சேரக்கூடாது என்பதில் கவனமாக இருப்போம் என்று விஜயகாந்திடம் சொன்னாராம் வாசன். இதைக் கேட்டு விஜயகாந்த் யோசித்தாராம். இருவரும் திமுக கூட்டணியை விரும்பவில்லை என்கிற ரீதியில் செய்தி வெளியானது.
அன்புமணியின் அட்டாக்
இது இப்படி இருக்க திடீரென்று திமுகவை நோக்கி பாமக கடிதக்கல் எறிந்தது. முதல்வர் வேட்பாளர் என்று அழைக்கப்படும் அன்புமணி ராமதாஸ், ஸ்டாலினைப் பார்த்து ஒண்டிக்கு ஒண்டி வர்றீங்களா? சோடி போட்டுக்குவோம் சோடி என்று அழைத்தார். இதற்கும் காரணம் இல்லாமல் இல்லை.
திட்டம் என்ன?
பாமக வீட்டு கல்யாணத்துக்கு பாசத்தோடு வந்து போனார் ஸ்டாலின். ஆனால் இப்போது தேமுதிக உடன் நெருங்குகிறார். எனவே விஜயகாந்த் திமுக பக்கம் போய்விடுவார் என்று நினைத்தே கடிதப் போரை தொடங்கியுள்ளாராம். இதன்மூலம் பாமகவின் பக்கம் பாஜகவை கொண்டு வரவேண்டும் என்பதே அன்புமணியின் திட்டம் என்கின்றனர் விசயம் அறிந்தவர்கள்.
தூது போனாரா கிருஷ்ணசாமி
தமாகவின் வாசன் வசப்படுத்த முதலில் டாக்டர் கிருஷ்ணசாமி என்ற கல்லை விட்டு ஆழம் பார்த்த திமுக நேரடியாக களத்தில் இறங்கிவிட்டது. இந்த சிக்னல் சரியாக இருக்கவே உடனே வாசனை சந்திக்க நேரம் கேட்டார் ஸ்டாலின்.
திருமண அழைப்பு
ஏனெனில் காங்கிரஸ் கட்சியைப் பற்றி கவலை இல்லை. திமுக உடனான கூட்டணிக்கு அவர்கள் தயாராகவே இருக்கிறார்கள். எனவே பாமகவிற்கு கிலியை ஏற்படுத்த தமிழரவின் மகன் அறிவுநிதியின் திருமணத்தை சாக்காக வைத்து ஒரு அரசியல் சந்திப்பை நிகழ்த்த முடிவு செய்தார் முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்.
காரியம் முக்கியம் அமைச்சரே
அன்புமணி ராமதாஸ் தாய்லாந்தில் இருந்து அறிக்கை விட்டுக்கொண்டிருக்க தனது அடுத்த காய் நகர்த்தலை சத்தமில்லாமல் ஆரம்பித்து விட்டார் ஸ்டாலின். முதலில் அவர் காங்கிரஸ் கட்சித்தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை அவரது வீட்டில் சந்தித்து திருமணத்திற்கு அழைப்பு விடுத்தார்.
வாசனுடன் சந்திப்பு
அடுத்ததாக ஜி.கே.வாசன் வீட்டிற்குப் போய் அவருக்கு பொன்னாடை போர்த்தி நட்பை பலப்படுத்தினார். திருமணத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளார். அவரும் நட்போடு அழைப்பிதழை வாங்கி வைத்துக்கொண்டார்.
பாஜகவையும் விடவில்லை
திமுகவிற்கு இப்போதைக்கு யாரும் எதிரியில்லை என்று காட்டிக்கொள்ளும் வகையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசையையும் சந்தித்து பேசி திருமணத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இதன்மூலம் ஒரே கல்லில் பாமகவையும் வீழ்த்தியாகிவிட்டது, தேமுதிகவிற்கும் எச்சரிக்கை சிக்னல் கொடுத்தாகிவிட்டது.
காரணம் என்ன?
இந்த சந்திப்பு இன்னொரு காரணத்தையும் முக்கியமாக கூறுகிறார்கள் உடன்பிறப்புக்கள். நீலகிரி மற்றும் கோவை ஆய்வுக்கூட்டத்தில் தேமுதிக உடன் கூட்டணி வைக்கலாமா என்று கருத்து கேட்டதற்கு வேண்டவே வேண்டாம் என்று கூறிவிட்டார்களாம் நிர்வாகிகள் பலரும். எனவேதான் தனது பாதையை வேறு பக்கம் திருப்பி விட்டார் ஸ்டாலின் என்கின்றனர்.
யார் முதல்வர்
எல்லாம் சரிதான்... ஆள் ஆளுக்கு முதல்வர் வேட்பாளர் என்று கூறிக்கொண்டிருக்க ஒருவேளை தமாகா ஜி.கே.வாசனும், தேமுதிக விஜயகாந்தும் திமுக உடன் கூட்டணி சேர்ந்தால் ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்வார்களா? என்பதே அரசியல் நோக்கர்களின் கேள்வியாக உள்ளது.