ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் - ஸ்டாலின்
நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை மத்திய கைவிட வேண்டும் என்று மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்
சென்னை: மக்களின் எதிர்ப்பையும் மீறி மத்திய அரசு நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்க தனியார் கம்பெனியுடன் ஒப்பந்தம் போட்டிருப்பது மிகுந்த கவலைக்கு உரியது என்று திமுக செயல்தலைவரும் சட்டசபை எதிர்கட்சித்தலைவருமான ஸ்டாலின் கூறியுள்ளார்.
தி.மு.க. செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தின் பின்தங்கிய மாவட்டமான புதுக்கோட்டை அருகில் உள்ள நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளூர் மக்களும், விவசாயிகளும் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தி வருகின்ற வேளையில், மக்களின் அச்ச உணர்வு பற்றி துளியும் கவலைப் படாமல், நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கான ஒப்பந்தத்தில் தனியார் கம்பெனியுடன் மத்திய அரசு கையெழுத்திட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
திமுக எம்பிக்கள்
தமிழக மக்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரம் கருதியும், வருங்கால தலைமுறையினரின் நலன் கருதியும் இத்திட்டத்திற்கான அனுமதி கொடுப்பதை தவிர்க்குமாறு மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திரபிரதானுக்கு ஏற்கனவே கடிதம் எழுதி, அதை திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் கொடுக்கவும் வைத்தேன்.
ஹைட்ரோகார்பன் ஒப்பந்தம்
அனைத்துக் கட்சிகளும் ஏன் தமிழக பா.ஜ.க. தலைவர்கள் கூட, "இத்திட்டம் வேண்டாம் என்று மக்கள் கூறினால் மத்திய அரசு அவர்கள் மீது இத்திட்டத்தை திணிக்காது", என்றே தொடர்ந்து கூறி வந்தார்கள். ஆனால் இவை அனைத்தையும் மீறி இப்போது மத்திய அரசு நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்க தனியார் கம்பெனியுடன் ஒப்பந்தம் போட்டிருப்பது மிகுந்த கவலைக்கு உரியது.
அச்சத்தை போக்குவோம்
இந்த திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, டைரக்டர் ஜெனரல் ஆப் ஹைட்ரோ கார்பன் வெளியிட்டுள்ள பத்திரிக்கைக் குறிப்பில், "இத்திட்டத்திற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அதுபற்றி மாநில அரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறோம். மத்திய அரசிடம் ஆலோசித்து, மாநில அரசு அவர்களின் அச்சத்தைப் போக்கிய பிறகு இத்திட்டப் பணிகள் துவங்கப்படும்", என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பொன். ராதாகிருஷ்ணன்
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இத்திட்டத்தை எதிர்த்துப் போராடிய நெடுவாசல் கிராம மக்களுக்கும், விவசாயிகளுக்கும் அளித்த வாக்குறுதிகள் ஈவு இரக்க மின்றி மீறப்பட்டு விட்டன. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்றுவதில் மத்திய அரசு உறுதியாக இருந்து, மாநில அரசின் துணையை இப்போது கோரியிருக்கிறது என்பதே இந்தப் பத்திரிக்கைச் செய்தியை படிக்கும் போது தெரிய வருகிறது.
எடப்பாடி பழனிச்சாமி
இதுதொடர்பாக மத்திய அரசு ஏற்கனவே மாநில அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில் உள்ள விவரங்கள் குறித்து இதுவரை இங்குள்ள அதிமுக அரசு வெளியிடவில்லை. இத்திட்டம் குறித்து சட்டமன்றத்தில் விவாதம் எழுந்தபோது கூட, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய அரசின் கடிதம் குறித்து விளக்கிட முன்வரவில்லை.
சட்டசபையில் வாக்குறுதி
ஆகவே நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக மத்திய அரசு எழுதியுள்ள கடிதத்தில் இருக்கும் விவரங்களை ஒளிவுமறைவின்றி மாநில அரசு உடனடியாக வெளியிட வேண்டும். அதேநேரத்தில், "இத்திட்டத்திற்கு மாநில அரசு அனுமதி கொடுக்காது", என்று ஏற்கனவே முதல்வர் சட்டசபையிலும் மக்கள் மன்றத்திலும் வாக்குறுதி அளித்துள்ளார். அந்த வாக்குறுதியை முதல்வர் காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
கைவிட வேண்டும்
இத்திட்டத்தை நிறை வேற்றியே தீருவோம் என்று மத்திய அரசும் பிடிவாதமாக இருக்காமல், விவசாயிகளின் கவலையையும், எதிர்காலத்தில் அந்தப்பகுதியில் விவசாயமே அழிந்துவிடும் என்ற மக்களின் அச்சத்தையும் கவனத்தில் கொண்டு, நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.