மக்கள் ஜனாதிபதியின் முதலாம் ஆண்டு நினைவு நாள்... ராமேஸ்வரம் நினைவிடத்தில் அப்துல்கலாம் சிலை திறப்பு
ராமேஸ்வரம்: மக்கள் ஜனாதிபதி அப்துல்கலாம் முதலாம் ஆண்டு நினைவு நாளில் ராமேஸ்வரம் பேய்க்கரும்பில் உள்ள நினைவிடத்தில் 7 அடி உயர வெண்கல சிலையை மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு இன்று திறந்து வைத்தார்.
மக்களின் போற்றுதலுக்குரிய ஜனாதிபதியாக திகழ்ந்த அப்துல்கலாம் கடந்த ஆண்டு ஜுலை 27-ந் தேதி மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் மாணவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தபோது மாரடைப்பால் காலமானார். அவரது மறைவு தேசத்தை உலுக்கியது.
அப்துல்கலாம் மறைந்து இன்றோடு ஒரு ஆண்டு நிறைவடைகிறது. அவரின் முதலாமாண்டு நினைவு நாள் உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. மத்திய அரசு, மாநில அரசுகளோடு இணைந்து ஏராளமான தனியார் அமைப்புகளுக்கும் இந்த நாளை அனுசரித்து வருகின்றன.
7 அடி உயர சிலை
ராமேஸ்வரம் பேய்க்கரும்பில் உள்ள நினைவிடத்தில் 350 கிலோ எடையும் 7 அடி உயரமும் கொண்ட வெண்கல சிலையை மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு இன்று திறந்து வைத்தார். அவருடன் மத்திய அமைச்சர்கள் மனோகர் பாரிக்கர், பொன். ராதாகிருஷ்ணன், தமிழக அமைச்சர்கள் நிலோபர், மணிகண்டன் மற்றும் கலாமின் அண்ணன் முகமதுமுத்துமீரான் லெப்பை மரைக்காயர் உட்பட அவரது குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
அடிக்கல் நாட்டு விழா
இதனைத் தொடர்ந்து அப்துல் கலாம் நினைவு மணிமண்டபம் மற்றும் அறிவுசார் மையத்துக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது. மேலும் நினைவிடத்தில் உருவாக்கப்பட்டிருந்த கலாம் உருவ மணல் சிற்பத்தையும் ஏராளமானோர் பார்வையிட்டனர்.
தற்காலிக கண்காட்சி
அதேபோல் பேக்கரும்பு நினைவிடத்தில் தற்காலிகமாக சிறுவயது முதல் கலாம் பயன்படுத்திய பொருட்கள் குறித்த கண்காட்சி ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாம்பன் பாலத்தில் அறிவு ஜோதி ஏற்றப்பட இருக்கிறது.
|
சிறப்பு பிரார்த்தனை
முன்னதாக நேற்று கலாமின் நினைவிடத்திற்கு வருகை தந்த கலாமின் மூத்த சகோதரர் முகமதுமுத்துமீரான் லெப்பை மரைக்காயர், மகன் ஜெயினுலாபுதின், மகள் சீமாமரைக்காயர், பேரன்கள் ஷேக் தாவுத், ஷேக்சலீம் உள்ளிட்ட குடும்பத்தினர் சிறிது நேரம் பாத்தியா ஓதி சிறப்பு துஆ பிரார்த்தனை செய்தனர்.
|
பாசிபருப்பு லட்டு
அதன் பின்பு கலாம் விரும்பி சாப்பிடும் பாசிபருப்பு லட்டு அங்கு நின்றிருந்த ஏராளமானவர்களுக்கு வழங்கப்பட்டது. இதே போல் கலாம் வீட்டிலும் மாலை 4 மணியளவில் ஜமாத் நிர்வாகிகள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்ட சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன.