தீபாவளி: 9,000 சிறப்புப் பேருந்துகள் இன்று முதல் இயக்கம்
சென்னை: தீபாவளி சிறப்புப் பேருந்துகள் சென்னையிலிருந்து இன்று முதல் இயக்கப்பட உள்ளன.
தீபாவளிக்கு சொந்த ஊர் செல்பவர்களுக்காக தமிழகம் முழுவதும் சுமார் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் சென்னையில் இருந்து மட்டும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவதால் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் தாற்காலிகமாக மேலும் 3 பேருந்து நடை மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கோயம்பேடு பேருந்து நிலையம்
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பழைய 6 நடைமேடைகளுடன் தாற்காலிக நடைமேடையும் சேர்த்து மொத்தம் தற்போது 9 நடைமேடைகள் உள்ளன. இதில் 3, 4, 5, 6 ஆகிய நடைமேடைகளில் முன்பதிவு செய்த பேருந்துகளும், 1, 2 ஆகிய நடைமேடைகளில் குறுகிய தூரம் செல்லும்.
தற்காலிக நடைமேடையில்
முன்பதிவு அல்லாத வெளியூர் பேருந்துகளும், தாற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள 7,8,9 ஆகிய நடைமேடைகளில் வெகுதூரம் செல்லும் முன்பதிவு அல்லாத பேருந்துகளும் நிற்கும்.இது குறித்த விவரம் அடங்கிய பெரிய பதாகை பேருந்து நிலையத்தின் உள் நுழைவுப் பகுதியில் வைக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
வெளியூர் செல்லும் பயணிகள் அதிக அளவில் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வர இருப்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்காக கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் புதிதாக காவல் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் சுழற்சி முறையில் புறநகர் பேருந்து நிலையம், ஆம்னி பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
பட்டாசுக்கு அனுமதியில்லை
கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு வரும் பயணிகள் அனைவரும் சோதனைக்குப் பின்னரே உள்ளே செல்ல அனுதிக்கப்படுவர். பட்டாசுகள் கொண்டு செல்ல அனுமதி இல்லை. உடைமைகள் சோதனை செய்யப்படும்.
சிசிடிவி கண்காணிப்பில்
கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி திருட்டில் ஈடுபடுபவர்களைக் கண்காணிக்க 32 சிசிடிவி கேமராக்கள் பயன்படுத்தப்படுவதுடன், சாதாரண உடைகளிலும் போலீஸார் வலம் வருவார்கள் என அவர் தெரிவித்தார்.