ஓயாத போராட்ட எதிர்ப்பு அலை: தூத்துக்குடி எம்ஜிஆர் பூங்கா பெயர்ப் பலகையில் ஸ்டெர்லைட் பெயர் அழிப்பு!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தீவிரமாக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் எம்ஜிஆர் பூங்காவில் ஸ்டெர்லைட் பெயர் தார் பூசி அழிக்கப்பட்டது.
தூத்துக்குடி : ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் தீவிரமாக போராடி வரும் நிலையில் எம்ஜிஆர் பூங்கா பெயர்ப்பலகையில் இருந்த ஸ்டெர்லைட் நிறுவன பெயரை பொதுமக்கள் தார் பூசி அழித்தனர்.
தூத்துக்குடியில் கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையால் மக்களுக்கு புற்றுநோய் பாதிப்பு, சுவாசப் பிரச்னை ஏற்படுவதாக அந்தப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். நிலத்தடி நீர் மாசுபட்டுள்ளதால் நீர் குடிக்கும் தன்மையை இழந்து வருகிறது என்றும் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப் புகையால் விளைநிலங்கள், மண்வளம் உள்ளிட்டவை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக கதறி வருகின்றனர்.
இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை 624 ஏக்கர் பரப்பளவில் விரிவாக்கம் செய்வதற்கான பணிகள் தொடங்கிய நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குமரெட்டியாபுரம் மக்கள் தொடர்ந்து 53 நாட்களாக போராடி வருகின்றனர். மரத்தடியில் அமைதி வழியில் தங்களது எதிர்ப்பை தெரிவித்து போராடி வரும் மக்களுக்கு அரசியல் கட்சியினரும், மாணவ அமைப்பினரும் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
நாளுக்கு நாள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் தூத்துக்குடி எம்ஜிஆர் பூங்கா பெயர்ப்பலகையில் இருந்து ஸ்டெர்லைட் பெயரை சிலர் தார் பூசி அழித்துள்ளனர். இந்தப் பூங்காவை ஸ்டெர்லைட் நிர்வாகம் பராமரித்து வருகிறது. ஸ்டெர்லைட் என்ற பெயர் கூட தூத்துக்குடியில் எங்குமே இருக்கக் கூடாது என்று தங்களின் எதிர்ப்பை வெளிக்காட்டும் விதமாக பூங்காவைச் சுற்றி வைக்கப்பட்டிருந்த அனைத்து பெயர்ப்பலகைகளிலும் ஸ்டெர்லைட் நிறுவன பெயரை தார் பூசி அழித்தனர்.