ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக் குழு... சென்னையில் கமலுடன் சந்திப்பு!
தூத்துக்குடி ஸ்டெர்லைட்டை எதிர்த்து போராட்டம் நடத்தி வரும் குழுவினர் சென்னையில் மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை சந்தித்துள்ளனர்.
சென்னை: தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கப்பணியை நிறுத்தக் கோரியும், நிரந்தரமாக மூடக் கோரியும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் மக்கள். இந்நிலையில் எதிர்ப்பு போராட்டக்குழுவை சேர்ந்த சிலர் சென்னையில் மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை சந்தித்துள்ளனர்.
தூத்துக்குடியில் இயங்கிவரும் ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்த ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் கடந்த 40 நாட்களைக் கடந்து ஆலைக்கு அருகிலுள்ள குமரெட்டியாபுரம் கிராம மக்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். இந்நிலையில், தூத்துக்குடியில் கடந்த 24-ம் தேதி, கண்டனப் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இதற்கு ஆதரவாக, கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டன. மினி பஸ்கள், ஆட்டோக்கள், தியேட்டர்கள் ஆகியவை இயங்கவில்லை.
மக்களின் இந்த போராட்டத்தில் கல்லூரி மாணவர்களும் பங்கேற்றுள்ளனர். தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் கல்லூரி மாணவர்கள் மற்றும் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்களும் வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதே போன்று சேலத்தில் இன்று ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
நாளுக்கு நாள் தூத்துக்குடி மக்களின் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டக்குழுவினர் சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதிமய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை சந்தித்துள்ளனர். ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்த கமல்ஹாசன் ஊடகங்களும் தமிழக மக்களும் இந்த ஸ்டெர்லைட் புரட்சியில் பங்கு பெறுவது கடமை.
தூத்துக்குடி மக்களுடன் நானும் உள்ளேன். புரட்சிக் களம் அழைத்தால் நான் வருவேன் என்று ட்வீட்டியிருந்தார்.