வறட்சி எதிரொலி: கிடுகிடுவென விலையேறும் வைக்கோல் கட்டு!
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பருவமழை குறைந்த நிலையில், வைக்கோல் கட்டு விலையேறுவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
நெல்லை: பருவமழை குறைந்த நிலையில், தங்கத்திற்கு ஈடாக வைக்கோல் கட்டு விலையேறுவதாக, நெல்லை, தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
பருவமழை தொடர்ந்து போக்கு காட்டி வருவதால் நெல்லை,தூத்துக்குடி மாவட்டங்களில் கடுமையான வறட்சி நிலவுகிறது. இதனால் கால்நடைகளுக்கு தீவண பற்றாக்குறை நிலவுகிறது.
நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி மூலம் 86 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்களில் விவசாயம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் இப்போது விவசாய நிலங்கள் பரப்பு வெகுவாக குறைந்து போய்விட்டது.
விவசாயம் நல்ல நிலையில் இருந்த காலத்தில் ஒரு கட்டு வைக்கோல் ரூ.40 வரை மட்டுமே விற்கப்பட்டு வந்தது. கடந்த சில ஆண்டுகளாக தென் மேற்கு பருவமழை பொய்த்துப் போனதால் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் தள்ளாடி வருகின்றனர். பெரும்பாலான விவசாய நிலங்கள் பிளாட்டுகளாக மாறி விட்டன.
இந்த பிரச்சனையால் கால்நடை தொழிலுக்கும் ஆபத்து ஏற்பட்டு விட்டது. நிலத்தடி நீர் மட்டமும் பாதாளத்துக்கு சென்று விட்டதால் கால்நடைக்கு தீவனமும், தண்ணீரும் சரியாக கிடைக்காமல் உள்ளது.
வறட்சி தொடர்வதால் வைக்கோல் கட்டுகள் வெளிமாநிலத்தில் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கட்டு வைக்கோல் ரூ.300 முதல் ரூ.400 வரை தற்போது விற்கப்படுகிறது. இது அதிகமாக இருப்பினும் கால்நடைகளை காப்பாற்ற வேறு வழி இல்லாமல் அதிக விலை கொடுத்து விவசாயிகள் இதை வாங்கி செல்கின்றனர்.
இதுகுறித்து சில விவசாயிகள் கூறுகையில், இந்த நிலை நீடித்தால் அடுத்த வரும் ஆண்டுகளில் கால்நடைகள் முற்றிலும் இல்லாத நிலை உருவாகும் என்று வருத்தத்துடன் தெரிவித்தனர்.