இன்னும் 4 ஆண்டுகளில் மன அழுத்தத்தால் பலர் உயிர் இழப்பர்: டாக்டர் திடுக் தகவல்
நெல்லை: உலக அளவில் மன அழுத்த நோயால் உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கையில் இரண்டாம் இடத்தை பிடிக்கும் வாய்ப்பு உள்ளதாக பிரபல மனநல மருத்துவர் பன்னீர் செல்வம் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லையில் பிரபல மனநல மருத்துவர் பன்னீர் செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
உலகம் முழுவதும் அக்டோபர் 10ம் தேதி தேசிய, உலக மனநல தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு உளவியல் முதலுதவி என்ற தலைப்பில் விழிப்புணர்வு கடைபிடிக்கப்படுகிறது. உலக அளவில் தற்போது மன அழுத்தத்தால் உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கை 4வது இடத்தில் உள்ளது. ஆனால் இது இன்னும் நான்கு ஆண்டுகளில் இருதய நோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை முதலிடத்திலும், மனநல பாதிப்பால் இறப்பவர்களின் எண்ணிக்கை இரண்டாம் இடத்திலும் வரும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை செய்துள்ளது.
இந்தியாவில் மன நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1000க்கு 50 பேர். ஆனால் இதற்கு முறையாக சிகிச்சை எடுப்பவர்கள் 100க்கு 10 பேர் மட்டுமே. நீரழிவு, ரத்த அழுத்தம், குடல்புண், நோ்ய் எதிர்ப்பு சக்தி குறைவு, கோபம், வெறுப்பு, தனிமை போன்ற மனரீதியாக எழும் உடல் பிரச்சனைகள் இதற்கான அறிகுறிகள்.
வாகன விபத்து, குடும்பத்தில் ஏற்படும் குழப்பம், நெருங்கிய உறவினர்களின் இழப்பு, வேலைப்பளு ஆகியவற்றால் இந்த பிரச்சனை அதிகமாகும். இவர்களுக்கு உளவியல் ரீதியாக சிகிச்சை அளிக்க வேண்டும். உளவியல் முதலுதவி சிகிச்சை அவசியம். கனிவான பார்வை, ஆறுதலான பேச்சு, அமைதிப்படுத்துதல், பிரச்சனைகளை வெளிப்படுத்த செவிமடுத்தல், அடிப்படை தேவைகள் கிடைக்க செய்தல், மூச்சுப் பயிற்சி, யோகா, தியானம், சிகிச்சைக்காக பரிந்துரைத்தல் போன்றவை இதற்கு முதலுதவியாகும். உளவியல் திட்டங்களை அதிக அளவில் பாடத்திட்டங்களில் சேர்க்க வேண்டும் என்றார்.