சென்னையில் ஆக.19-ல் நீதி கேட்டு நாள் முழுவதும் நிற்கும் போராட்டம்... சுப.உதயகுமார் அறிவிப்பு
சென்னை: மக்கள் நலனைக்காக்கும் வகையில், தமிழக வளங்கள் கொள்ளை போவதற்கு எதிராக, நீதி கேட்டு நிற்கும் போராட்டத்தை சென்னையில் நடத்த இருப்பதாக, பச்சைத் தமிழகம்கட்சியின் தலைவர் சுப.உதயகுமார் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ''கூடங்குளத்தில் இரு அணு உலைகளைக் கட்டாதே என்று போராடினால், ஆறு அணு உலைகளைக் கட்டுவோம் என்கின்றன மத்திய, மாநில அரசுகள். ஒரு கதிராமங்கலம் வேண்டாம் என்று களமாடினால், அரை சதம் கதிராமங்கலங்களுக்கு அறிவிப்பு வெளியாகிறது.
அணுத்தீமை முதல் நீட் தேர்வு வரை, ஏராளமான பிரச்சினைகளுக்காக தமிழ் மக்கள் போராடிக்கொண்டிருக்கிறோம். நம் வளங்கள் சுரண்டப்படுகின்றன. வாழ்வாதாரங்கள் அழிக்கப்படுகின்றன. வருங்காலம் நசுக்கப்படுகிறது. நமக்காக எழுந்து நிற்க வேண்டிய, வாதாட வேண்டிய தமிழக அரசு டெல்லியைக் கண்டு அஞ்சி நடுங்கி, வாக்களித்த மக்களையே காட்டிக் கொடுக்கிறது. குண்டர் சட்டம் போட்டு வாட்டி வதைக்கிறது.
இப்படி பல்வேறு சமூக பொருளாதார அரசியல் பிரச்சனைகளால், மத்திய மாநில அரசுகளால் கொடுமைப்படுத்தப்படும் எட்டுக்கோடி தமிழக மக்களுக்காக நீதி கேட்டு நிற்கும் போராட்டம் ஒன்றை ஆகஸ்ட் 19 சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னையில் நடத்த இருக்கிறோம்.
இதில் பச்சைத் தமிழகம் கட்சித் தோழர்களும், பிற இயக்கங்களின் தோழர்களும் கலந்துகொண்டு உரையாற்றுவார்கள்'' என தெரிவித்துள்ளார்.