சென்னையில் பகலில் கொளுத்திய வெயில்! நள்ளிரவில் கொட்டிய மழை!!
லெஹர் புயல் அந்தமானை தாக்கிய நேரத்தில் சென்னையில் பல இடங்களில் பரவலாக மழை பெய்தது.
சென்னையில் கடந்த சில தினங்களாக கோடை காலத்தைப் போல வெயில் கொளுத்தி வருகிறது. இந்த நிலையில் வங்காளவிரிகுடாவில் உருவான லெஹர் புயல் அந்தமானை தாக்கும் என்று கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரவு நேரத்தில் சென்னையில் குளிர் காற்று வீசியது.
நள்ளிரவு நேரத்தில் புயல் அந்தமானை தாக்கிய நேரத்தில் சென்னையில் கனமழை கொட்டியது. நகரின் முக்கிய பகுதிகளான திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், மந்தைவெளி, அடையாறு மற்றும் பல இடங்களில் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. புறநகர் பகுதிகளிலும் மழை கொட்டியுள்ளது.
தென்மாவட்டங்களில் மழை
தமிழகத்தின் தென் மாவட்டத்தில் பல இடங்களில் நேற்று நல்ல மழை பெய்துள்ளது. வத்திராயிருப்பு 15 செ.மீ., ராஜபாளையம் 14 செ.மீ., நாங்குநேரி 10 செ.மீ., சிவகாசி, குளச்சல் தலா 8 செ.மீ அளவு மழை பெய்துள்ளது.
உத்தமபாளையம், சங்கரன்கோவில் தலா 7 செ.மீ., பரங்கிப்பேட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர், கடலாடி, சிதம்பரம் தலா 6 செ.மீ., குன்னூர், பூதப்பாண்டி, நாகர்கோவில் தலா 5 செ.மீ., மழை பெய்துள்ளது.
முத்துப்பேட்டை, குழித்துறை, செங்கோட்டை, சத்தியமங்கலம், பாளையங்கோட்டை தலா 4 செ.மீ., சேத்தியாதோப்பு, செய்யூர், தஞ்சாவூர், தக்கலை, தூத்துக்குடி, கொள்ளிடம், தென்காசி, கடலூர் தலா 3 செ.மீ., மழை பெய்து உள்ளது.