பட்சி பறக்க ரெடியா இருக்கு!... தினகரனுடன் பேச்சு நடத்த ஓபிஎஸ், ஈபிஎஸ்க்கு கனகராஜ் எம்எல்ஏ கோரிக்கை!
ஜெயலலிதாவின் ஆட்சி நீடிக்க டிடிவி தினகரனுடன் ஓபிஎஸ், ஈபிஎஸ் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று சூலூர் எம்எல்ஏ கனகராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.
கோயம்புத்தூர் : ஜெயலலிதாவின் ஆட்சி நிலைக்க டிடிவி தினகரனுடன் முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று சூலூர் தொகுதி எம்எல்ஏ கனகராஜ் கேட்டுக் கொண்டுள்ளார். மக்களிடம் மாறி மாறி ஓட்டு கேட்டதாலேயே அதிமுக தோல்வியை தழுவ நேரிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் தினகரன் அமோக வெற்றி பெற்ற நிலையில் அதிமுகவில் மீண்டும் உறுப்பினர்கள் நீக்கம்,பதவி பறிப்பு விஷயங்கள் அமர்க்களப்படுகின்றன. 3 மாதத்தில் ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவேன் என்று தினகரன் கெடு விடுத்துள்ளார்.
ஆனால் அதிமுகவில் இருந்து ஒரு செங்கல்லைக் கூட உருவ முடியாது. இங்கு இருக்கும் அனைவரும் சொக்கத் தங்கங்கள் என்று துணை முதல்வரும் அதிமுகவின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
மாறி மாறி ஓட்டு கேட்டதால் பின்னடைவு
ஆனால் எம்எல்ஏக்களின் மனநிலை வேறு மாதிரி இருக்கிறது என்பதை உணர்த்துகிறது சூலூர் எம்எல்ஏ கனகராஜின் பேட்டி. ஆர்கே நகர் தேர்தல் குறித்து அவர் கூறியதாவது : கடந்த முறை ஆர்.கே.நகர் தேர்தல் அறிவிக்கப்பட்ட போது நாங்கள் அனைவரும் சேர்ந்து தினகரனுக்காக தொப்பி சின்னத்தில் ஓட்டு கேட்டோம். ஆனால் தற்போது நாங்கள் அதே ஆர்.கே.நகரில் தினகரனை எதிர்த்து இரட்டை சிலை சின்னத்தில் ஓட்டு கேட்டோம்.
மக்கள் கேள்வி
நான் வாக்கு சேகரிக்க சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் இதையே சொல்லி கேலி செய்தனர். ஆனால் அவர்களிடம் நாங்கள் இரட்டை இலை பெற்றதைக் கூறி வாக்கு சேகரித்தோம். கடந்த முறை தினகரனுக்கு ஆதரவாக தொப்பி சின்னத்தில், இந்த முறை தினகரனுக்கு எதிர்ப்பாக இரட்டை இலை சின்னத்தில் என மாறி, மாறி ஓட்டு கேட்டதால் எங்கள் பிரசாரம் எடுபடாமல் போய் விட்டது.
கூட்டுச்சதி என்பதை ஏற்க முடியாது
தினகரன் தி.மு.க.வுடன் கூட்டுசதி செய்து ஜெயித்து விட்டார் என கூறுவதை ஏற்க முடியாது. தி.மு.க.வை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது மட்டும் தேர்தல் முடிவில் தெளிவாகிறது. நான் கூட ஆளும் கட்சியின் வேட்பாளர் மதுசூதனன் தான் வெற்றி பெறுவார், தினகரனுக்கு 2-வது இடம் தான் கிடைக்கும் என்று நினைத்தேன். ஆனால் தினகரன் வெற்றி பெற்று விட்டார். மக்கள் தீர்ப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
அதே மரியாதை
இந்த ஆட்சி 2 மாதத்தில் கலையும் என தினகரன் கூறி இருப்பது அவரது விருப்பம். ஜெயலலிதாவின் ஆட்சி நிலைக்க எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சேர்ந்து தினகரனுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு ஜெயலலிதா கொடுத்த அதே மரியாதையை தினகரனும் கொடுக்க வேண்டும்.
ஜெ. கனவு
இந்த ஆட்சி 5 ஆண்டுகள் தொடர்ந்து நல்லாட்சி புரிய வேண்டும். ஜெயலலிதாவின் கனவு நினைவாக வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம் என்று கனகராஜ் கூறியுள்ளார். ஆக மொத்தத்தில் தினகரனுக்கு ஆதரவாக முதன்முதலாக ஒரு எம்எல்ஏ பேசியுள்ளார், விரைவில் இந்த பட்சி பறந்துவிடுமா?