சுடும் வெயில்... போக்குவரத்து போலீசாருக்கு பாக்கெட் மோர், ஜில் சர்பத்
வெயிலின் கொடுமையை சமாளிக்க போக்குவரத்து போலீசாருக்கு மோர், எலுமிச்சை சர்பத் வழங்கப்படுகிறது.
சென்னை: வெயில் வாட்டி வதைத்து வருகிறது. நாள் முழுவதும் வெயிலில் நின்று போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் காவல்துறையினருக்கு குளிர்ச்சி தரும் நீர்மோர், எலுமிச்சை சர்பத்
வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.கோடை காலம் முடியும் வரை இந்த குளிர்பானம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
வெயிலோ, மழையோ விடுமுறையின்றி போக்குவரத்தை கண்ணும் கருத்துமாக ஒழுங்குப்படுத்துவதில் போக்குவரத்து காவல்துறையினரில் பங்கு மகத்தானது. தண்ணீர் குடிக்க கூட நேரமின்றி பணியாற்றுகின்றனர்.
வெயிலின் தீவிரத்தை சமாளிக்க போக்குவரத்து போலீசாருக்கு பாக்கெட் மோர், குளிர்பானம் வழங்க கடந்த ஆண்டு ஜெயலலிதா உத்தரவிட்டார். இந்த ஆண்டும் கோடைகாலம் முடியும் வரை போக்குவரத்து போலீசாருக்கு தினமும் மோர் வழங்கப்பட உள்ளது.

டிராபிக் போலீஸ்
போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவது போக்குவரத்து போலீசாரின் முக்கிய பணியாக உள்ளது. போக்குவரத்து போலீசார் கோடைக் காலத்தில் கடும் வெயிலில் சாலைகளிலும்,
சாலை சந்திப்புகளிலும், நிழலுக்கு ஒதுங்கக் கூட இயலாத இடங்களில் நின்று பணிபுரிய வேண்டியுள்ளது.

ஜில் குளிர்பானம்
போக்குவரத்து போலீசாரின் சிரமத்தைக் குறைக்கும் வகையில், இவர்களுக்கு பணியில் இருக்கும் போது, காலை எட்டு மணி முதல் மாலை நான்கு மணி வரை, உள்ள நேரத்தில், இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை குளிர்பானம் வழங்க கடந்த ஆண்டு தமிழக அரசு உத்தரவிட்டது.

பாக்கெட் மோர்
தற்போது வெயில் வாட்டி வதைப்பதால் போக்குவரத்து போலீசாருக்கு நேற்று முதல் பாக்கெட் மோர் வழங்கப்பட்டது. முதல் கட்டமாக சென்னையில் உள்ள போக்குவரத்து போலீஸார் 2,500 பேருக்கு தலா 2 வீதம் 5 ஆயிரம் மோர் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டன.

கோடை முடியும் வரை குளிர்பானம்
கோடை காலம் முடியும் வரை தொடர்ந்து 122 நாட்கள் பாக்கெட் மோர் வழங்கப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. களத்தில் பணி செய்யும் போக்குவரத்து போலீசாருக்கு மோர் சீராக வழங்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்க உள்ளனர்.












Click it and Unblock the Notifications