சென்னையில் 2 வாரத்தில் மழை வரப் போகுதாம்.. ஆனா இப்ப குடிக்கத் தண்ணீ இல்லையே!
சென்னை: வடகிழக்கு பருவமழை இம்மாதம் 20ம் தேதிக்கு மேல் தொடங்கும் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், கோடை முடிந்தும் தண்ணீர் பிரச்சினையில் தவிக்கும் சென்னை மக்களுக்கு சற்று நிம்மதி ஏற்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த சில வாரங்களாக திடீர் திடீர் என வானிலை மாறி, லேசாக தூறல் போடுவதும், பின்னர் அதன் சுவடே தெரியாமல் வெயில் கொளுத்துவதும் என குழப்பமான வானிலையே நிலவி வருகிறது.
வழக்கமாக தமிழகத்தில் தென்மேற்கு பருவமழைக்காலம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை கணக்கிடப்படும். அதன்படி இந்தாண்டு ஜூன் மாதம் 5-ந் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. ஆனால், இந்த காலத்தில் தமிழகத்தில் சராசரி அளவை விட குறைவாகவே மழை பதிவானது.
தண்ணீர் தட்டுப்பாடு...
இதனால் சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு தொடர்ந்து நீடித்து வருகிறது. தற்போது தினமும் 500 மில்லியன் லிட்டர் தண்ணீர் சென்னைவாசிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
தேவையில் பாதி...
ஆனால், மக்களின் தேவையோ நாளொன்றிற்கு 1,100 மில்லியன் லிட்டர் தண்ணீர் ஆகும். சென்னை மக்களின் தேவையில் சரிபாதி மட்டுமே தற்போது பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.
காசு பார்க்கும் தண்ணீர் லாரிகள்...
இதனால், சென்னையில் பல முக்கிய ஏரியாக்களில் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் விதத்தை மக்கள் தேடி வருகின்றனர். இதனை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் சில தனியார் தண்ணீர் லாரி நிறுவனங்கள், தங்களது லாரிக்கள் மூலம் மக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்து வருகின்றனர். எவ்வளவு விலை கொடுத்தாலும் மக்கள் வாங்கியே ஆக வேண்டிய கட்டாயத்தால் இருப்பதால், இந்த தண்ணீர் லாரிக்காரர்கள் வைப்பது தான் விலை.
வடகிழக்கு பருவமழை...
இந்நிலையில், இம்மாதம் 20ம் தேதிக்கு மேல் வடகிழக்கு பருவமழை ஆரம்பிக்கும் என வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், தென்மேற்குப் பருவமழை ஏமாற்றியதை வடகிழக்கு பருவமழை தீர்த்து வைக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
கூடுதல் மழை...
அதோடு, இம்முறை வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட கூடுதலாக பெய்யும் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகின்றனர். இதனால் சென்னையின் தண்ணீர் தட்டுப்பாடு நீங்கும் என்ற நம்பிக்கை மக்கள் மனதில் ஏற்பட்டுள்ளது.
நம்பிக்கை...
வழக்கமாக பெய்யும் மழை பெய்தால் கூட தண்ணீர்ப் பிரச்சினைக்கு நல்லதீர்வு கிடைக்கும். மேலும் ஏரிகள் உள்ள பகுதிகளில் பெரும் மழை பெய்தால் ஏரிகளி்ன் நீர்மட்டமும் உயரும், நிலத்தடி நீர் மட்டும் உயர்ந்து மக்களுக்கு நிம்மதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அனைவரும் உள்ளனர்.
நேற்று இரவு மழை...
இதற்கிடையே, நேற்று இரவு சென்னையிலும் புறநகர்ப் பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது. இடி மின்னலுடன் பெய்த மழையால் மக்கள் நிம்மதியடைந்தனர். நிலைமை இப்படியே நீடித்தால் முன் கூட்டியே கூட பருவ மழை தொடங்கும் என்ற நம்பிக்கையிலும் மக்கள் உள்ளனர்.