நின்று பெய்யும் மழை.. நீடிக்குமா மகிழ்ச்சி.. கோடை மழையால் மக்கள் குஷி
சென்னை: தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பெய்து வரும் கோடை மழையால் மக்கள் மகி்ழ்ச்சி அடைந்துள்ளனர். விட்டு விட்டு கொட்டி வரும் இந்த மழையால் கத்திரி வெயிலின் தாக்கம் மக்களை விட்டு விலகியுள்ளதால் மழை தொடருமா என்ற எதிர்பார்ப்பும் மக்களிடையே நிலவுகிறது.
இலங்கை அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, வலுப்பெற்று தாழ்வு பகுதியாக மாறி உள்ளது. இதன்காரணமாக தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் இன்று (திங்கட்கிழமை) சில இடங்களில் பலத்தமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த வருடம் வடகிழக்கு மழை பொய்த்து போனது. போதிய மழை பெய்யவில்லை. இதனால் இந்த வருடமாவது போதிய அளவுக்கு மழை பெய்யவேண்டும் என்று தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
வெளுத்தெடுத்த வெயில் ஓடிப் போச்சு
இந்த நிலையில்தான் தற்போது கத்திரி தொடங்கிய நாளில் மழை கொட்டத் தொடங்கி தொடர்ந்து வருகிறது. இதனால் தலைநகர் சென்னை முதல் மாநிலத்தின் பல பகுதிகளிலும் கொளுத்தி வந்த வெயிலின் தாக்கம் சற்று குறைந்து மக்கள் குளிர்ந்து காணப்படுகின்றனர்.
கடந்த சில நாட்களாக
கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் கன்னியாகுமரி முதல் தேனி வரை நல்ல மழையை மக்கள் பார்த்து மகிழ்ந்து வந்தனர்.
நேற்று முதல் பரவலாக பலத்த மழை
இந்த நிலையில் நேற்று முதல் தமிழகத்தின் பல பகுதிகளிலும் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது.
கடலோர மாவட்டங்களில்
கன்னியாகுமரி, நெல்லை, தஞ்சை, நாகை, திருவாரூர், பெரம்பலூர் மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது.
சென்னையில்
தலைநகர் சென்னையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நேற்று மழை கொட்டியதால் மக்கள் குஷியடைந்தனர். பலரும் மழையை வேடிக்கை பார்க்கும் அளவுக்கு அந்த மழை மக்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியது.
விடிய விடிய
இந்த நிலையில் நேற்று இரவும் பல பகுதிகளில் விடிய விடிய தூறல் காணப்பட்டது. அதிகாலையில் பல பகுதிகளில் பலத்த மழை கொட்டியது.
நகர்களிலும் - புறநகர்களிலும்
தாம்பரம், குரோம்பேட்டை, அம்பத்தூர், ஆவடி, திருமுல்லைவாயல், பூந்தமல்லி, எழும்பூர், தேனாம்பேட்டை, சாந்தோம், அடையார் உள்பட பல பகுதிகளில் லேசான மழை பெய்தது.
நகரில் நல்ல மழை
நுங்கம்பாக்கத்தில் 3.5 மில்லி மீட்டர் மழையும், மீனம்பாக்கத்தில் 7.5 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.
காலையில் கடலோரங்களில் கன மழை
இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தை நோக்கி நகர்ந்ததால் இன்று காலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், கடலூர், விழுப்புரம், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்பட கடலோர மாவட்டங்களில் 1 மணி நேரம் கனமழை பெய்தது.
தண்ணீர் தேங்கும் அளவுக்கு மழை
சென்னையில் பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. வடசென்னையை விட தென்சென்னையில் அதிக மழை பெய்ததாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
ஆர்ப்பரிக்கும் குற்றாலம்
குற்றாலம் மலைப் பகுதியில் கனமழை பெய்ததால் அருவியில் மழைநீர் ஆர்ப்பரித்து கொட்டியது. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, சேலம், கடலூர், திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்பட பல மாவட்டங்களில் சுமார் 1 மணி நேரம் பரவலாக மழை பெய்தது.
புதுச்சேரியில்
புதுச்சேரியில் வெயில் தொடங்கிய நாளில் மழை கொட்டியதால் மக்கள் ஆனந்தமடைந்தனர். நேற்று காலை முதலே வானத்தில் மேகங்கள் கூட்டம் கூட்டமாக பவனி வந்தன. காலை 7மணி அளவில் இடி, மின்னலுடன் மழை கொட்ட தொடங்கியது. சுமார் 30நிமிடம் இந்த மழை நீடித்தது.