திமுக எம்எல்ஏக்களின் போட்டி சட்டசபை கூட்டத்தில் சுவாரசியம்.. "சபாநாயகராகவே" நடித்த துரைமுருகன்
சென்னை: சஸ்பெண்ட் செய்யப்பட்ட திமுக எம்.எல்.ஏக்கள் இன்று போட்டி சட்டசபை கூட்டத்தை நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த போட்டி சட்டசபையின் சபாநாயகராக எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் 'நடித்தார்'. அமைச்சராக நடித்த பொன்முடி 'முதல்வர் அம்மா' அவர்களை ஆலோசித்து பதில் சொல்வதாக கூற போட்டி சட்டசபையில் சிரிப்பலை எழுந்தது.,
சட்டசபையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட திமுக எம்.எல்.ஏக்கள் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறைக்கு செல்ல முயன்றனர். ஆனால் போலீசார் அனுமதி மறுத்ததால் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர்.
இன்று காலை 9 மணியில் இருந்தே சஸ்பெண்ட் செய்யப்பட்ட திமுக உறுப்பினர்கள் ஒவ்வொருவராக பேரவையின் 4வது எண் நுழைவு வாயில் அருகே வரத் தொடங்கினர். இதனால் அந்த வாயில் மூடப்பட்டது. அந்த வாயில் வழியாகத்தான் எதிர்கட்சித்தலைவர் அறைக்குச் செல்ல வேண்டும் என்பதால் அங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
போட்டி சட்டசபைக் கூட்டம்
எதிர்கட்சித்தலைவர் அறைக்குச் செல்ல ஸ்டாலின் உள்ளிட்ட சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களுக்கு அனுமதி மறுக்கப்படது. இதனால் 4ம் எண் நுழைவு வாயில் அருகிலேயே அமர்ந்து போட்டி சட்டசபைக் கூட்டத்தை நடத்தினர்.
துரைமுருகன் சபாநாயகர்
திமுக எம்.எல்.ஏக்கள் இரண்டு பிரிவாக அமர்ந்து பேசத் தொடங்கினர். இந்த போட்டி கூட்டத்திற்கு சபாநாயகராக நடித்தார் எதிர்கட்சித்துணைத்தலைவர் துரைமுருகன். வழக்கம் போல திருக்குறள் வாசித்து அவையை தொடக்கி வைத்தார் துரைமுருகன்.
முதல்வர் வாய்ப்பு
போட்டி சட்டசபைக் கூட்டத்தில் திமுக எம்.எல்.ஏக்கள் கேள்விக்கு கிண்டலாக திமுக எம்.எல்.ஏக்களே அமைச்சர்களைப் போல பதிலளித்தனர். ஆனால் முதல்வரைப் போல ஸ்டாலின் அமர்ந்திருந்தாலும் அமைச்சர்களாக நடித்தவர்கள் "அம்மா" என்றுதான் பேசினர்.
ஒரு வாய்ப்பு கொடுங்க
சட்டசபையில் பேசுவது போல திமுக உறுப்பினர்கள் மைக்கை பிடித்து பேசினர். போட்டி பேரவை கூட்டத்திலும் திமுக எம்.எல்.ஏக்கள் சிலர் வாய்ப்பு கொடுங்க என்று கேட்டனர். உறுப்பினர்கள் கேள்விகளுக்கு துரைமுருகன் கிண்டலாக பதிலளித்து பேசினார்.
காவிரி பிரச்சினை
போட்டி சட்டப்பேரவைக் கூட்டத்தில் காவிரி பிரச்சனையை ஸ்டாலின் எழுப்பினார். கர்நாடக மாநிலத்தில் அனைத்துக்கட்சிகளும் ஒற்றுமையுடன் செயல்படுகின்றது என்றார். காவிரி பிரச்சனை பற்றி பேச அனைத்துக் கட்சி பிரதிநிதியையும் டெல்லி அழைத்துச் செல்லவேண்டும் என்று ஸ்டாலின் கூறினார்.
டெங்கு காய்ச்சல்
ஆர்.கே.நகரில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து விட்டது என்று ஒரு உறுப்பினர் கூறியதற்கு அமைச்சர் போல பதிலளித்த பொன்முடி, நான் செய்தி படிக்கவில்லை. டிவி பார்க்கவில்லை. அம்மாவிடம் கேட்டு விட்டு பதில் கூறுகிறேன் என்று நடித்தார்.
அணைக்கட்டு தொகுதி
எங்க தொகுதி பேரு அணைக்கட்டு ஆனால் அங்கு எந்த அணைக்கட்டுமே இல்லையே என்று குறைபட்டார் அந்த தொகுதி எம்.எல்.ஏ. அதற்கு கிண்டலாக பதிலளித்த துரைமுருகன், கண் தெரியாதவருக்கு கண்ணாயிரம் என்று பெயர் வைப்பதில்லையா அது போலத்தான் இதுவும் என்று கூறினார்.
இன்று முடிந்தது நாளை தொடரும்
ஒரு மணிநேர விவாதங்களுக்குப் பின்னர் பேரவை முடிந்ததாக சபாநாயகராக நடித்த துரைமுருகன் அறிவித்தார். நாளை கூட்டம் வழக்கம் போல கூடும் என்றும் அறிவித்தார் துரைமுருகன்.
அப்ப நாளையும் போட்டி சட்டசபை?