சுவாதி கொலை வழக்கில் யாரையும் கைது செய்யவில்லை... வதந்தி பரப்பாதீர்: போலீஸ் கமிஷனர்
சென்னை: சுவாதி கொலை வழக்கு மிகவும் முக்கியமான வழக்காகும். இதுவரை இந்த வழக்கில் யாரும் கைது செய்யப்படவில்லை. தயவுசெய்து வதந்திகளை யாரும் பரப்பவேண்டாம் என்று சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் டி.கே.ராஜேந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
கடந்த ஜூன் 24ம் தேதி வெள்ளிக்கிழமையன்று காலை 6.30மணிக்கு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். சுவாதி கொலை செய்யப்பட்டு 8 நாட்கள் கடந்துள்ள நிலையில், கொலையாளி குறித்து எந்த வித தகவலும் கிடைக்கவில்லை.
கொலை நடந்த நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தின் அருகில் உள்ள தெருக்களில் பொருத்தப்பட்டுள்ள 15 கண்காணிப்பு கேமராக்களில் கொலைகாரனின் உருவம் பதிவாகியுள்ளது. அந்த படத்தை எல்லாம் போலீசார் சேகரித்துள்ளனர். கொலையாளி கைது செய்யப்பட்டு ரகசிய இடத்தில் விசாரணை நடைபெறுவதாக தகவல்கள் உலா வருகின்றன. இதனை சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் ராஜேந்திரன் மறுத்துள்ளார்.

தீவிர விசாரணை
தனிப்படை போலீசார் மட்டுமல்லாது கிட்டத்தட்ட சென்னை நகர உயர் போலீஸ் அதிகாரிகள் அனைவருமே இந்த வழக்கு தொடர்பாக தனித்தனியாக விசாரித்து வருகிறார்கள். சந்தேகப்படும் நபர்களை எல்லாம் பிடித்து விசாரணை மேற்கொள்கின்றனர்.

கொலையாளி புகைப்படம்
கொலையாளியின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளோம் அந்த புகைப்படத்தை பார்த்து படத்தில் இருப்பவன்தான் கொலைகாரன் என்பது உறுதிபட முடிவாகிவிட்டது. கொலையாளி பற்றிய தகவல் தெரிந்த பொதுமக்கள் போலீசுக்கு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் பெயர், விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். கொலையாளியை கிட்டத்தட்ட நெருங்கிவிட்டோம். கண்டிப்பாக பிடித்தே தீருவோம் என்று கூறியுள்ளார்.

வதந்தி பரப்பாதீர்கள்
இந்த வழக்கு மிகவும் முக்கியமான வழக்காகும். எனவே இந்த வழக்கின் விசாரணை விவரங்களை நான் வெளிப்படையாக சொல்ல முடியாது. இதுவரை இந்த வழக்கில் யாரும் கைது செய்யப்படவில்லை. தயவுசெய்து வதந்திகளை யாரும் பரப்பவேண்டாம் என்றும் டி.கே.ராஜேந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

கொலையாளியின் விபரம்
சுவாதியை வெட்டிக்கொல்வதை நேரில் பார்த்த நுங்கம்பாக்கம் ரயில்நிலைய கேண்டீன் ஊழியர் புகைப்படத்தில் இருப்பவர்தான் கொலையாளி என்று உறுதிபட கூறிவிட்டார். ஆனால் அந்த புகைப்படத்தில் இருப்பவர் யார்? அவரது பெயர் என்ன? எந்த ஊர்? என்பன போன்ற விவரங்கள் மட்டும் போலீசாருக்கு இன்னும் உறுதியாக கிடைக்கவில்லை.

போலீசார் வேண்டுகோள்
சுவாதி கொலையாளி குறித்த தகவல் தெரிந்தால் 8939966985, 9840962359 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம். மேலும், திருவல்லிக்கேணி துணை கமிஷனரை 9443481933 என்ற எண்ணிலும், நுங்கம்பாக்கம் கூடுதல் ஆணையரை 9840190505 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். மேலும் 9751804830 மற்றும் 98840707878 என்ற எண்களிலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

200 பேரிடம் விசாரணை
இதுவரை சுவாதியின் பெற்றோர், அக்காள் மற்றும் சுவாதியின் தோழி, நெருங்கிய நண்பர் உள்ளிட்ட 200 பேரிடம் தனிப்படை போலீசார் விசாரித்துள்ளனர். சுவாதியோடு அடிக்கடி செல்போனில் பேசிய பெரும்பாலான பேரிடம் போலீசார் விசாரித்துவிட்டனர். சுவாதியின் பேஸ்புக் நண்பர்களை பிடித்தும் விசாரணை நடக்கிறது.

விரைவில் சிக்குவான்
கொலையாளி எழும்பூர், நுங்கம்பாக்கம், திருவல்லிக்கேணி பகுதிகளில் உலாவும் ஒரு நபராக இருக்கலாம் என்று கருதியே அப்பகுதி உதவி ஆணையர்களின் மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. விசாரணை சரியான பாதையிலேயே சென்று கொண்டிருக்கிறது. விரைவில் சுவாதியை கொலை செய்தவன் சிக்குவான் என்று காவல்துறை ஆணையர் டி.கே. ராஜேந்திரன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications