பாரா சைலிங் ஆபத்தில் அலர்ட்டாக தப்பிய போலீஸ் அதிகாரி சைலேந்திர பாபு! அறியாமல் சிக்கிய தொழிலதிபர்
கோவை: கோவை, மருத்துவக் கல்லுாரி பொன்விழாவை முன்னிட்டு, 5ம் தேதியில் இருந்து, பாரா சைலிங் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்திய வான் விளையாட்டு மற்றும் அறிவியல் மைய, கோவை கிளை தலைவர் பாபு, மாணவர்களுக்கு பாரா சைலிங் பயிற்சி அளித்துள்ளார். வெள்ளிக்கிழமை நடைபெற்ற பயிற்சியின்போது ஒரு நபருக்கு ரூ.300ம், நேற்றைய பயிற்சியின்போது ஒரு நபருக்கு ரூ.500ம் வசூலிக்கப்பட்டுள்ளது.
நேற்று மதியம், 12:00 மணியளவில், பீளமேடு பகுதியைச் சேர்ந்த மல்லேஸ்வர ராவ் (53) பயிற்சியில் பங்கேற்றார். பாராசூட் சுமார் 60 அடி உயரத்தில் பறந்தபோது, திடீரென பெல்ட் அறுந்துள்ளது.
விபத்து
இதனால் கயிற்றை பிடித்தபடியே அவர் தொங்கி சத்தம்போட்டார். இதை கேட்டு அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் பாராசூட்டின் கீழ் பகுதியை நோக்கி ஓடினர். ஆனால் அதற்குள் அவர் கீழே விழுந்தார்.
தொழிலதிபர் சாவு
கீழே விழுந்ததும் பந்து போல அவரது உடல் மீண்டும் மேலே தூக்கி எறியப்பட்டது. இந்த சம்பவத்தில், இடுப்பு, முதுகு, கை, கால் மற்றும் தலையில் படுகாயமடைந்த அவர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
முன்கூட்டியே
மருத்துவக் கல்லுாரி மைதானத்தில், பாரா சைலிங் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், கடந்த, 5ம் தேதி, அதிக காற்று வீசியதால், ஒரே நாளில் பயிற்சி முடிக்கப்பட்டது.
காவலாளி சிக்கினார்
5ம் தேதி வெள்ளிக்கிழமை, நடந்த பயிற்சியின்போது, கொடிசியாவில் பணிபுரியும், வயதான காவலாளி ஒருவர் ஆசைப்பட்டு பாரா சைலிங்கில் ஈடுபட்டுள்ளார். காற்று அதிகமாக வீசியதால் அவர் 10 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தார். நல்ல வேளையாக லேசான காயத்தோடு அவர் தப்பியுள்ளார்.
சைலேந்திர பாபு
அன்றைய தினம்தான், பாரா சைலிங் பயிற்சியில் ஈடுபட, தமிழக கடலோர காவல் படை ஏ.டி.ஜி.பி. சைலேந்திர பாபு வந்துள்ளார். ஆனால் பயிற்சியில் ஈடுபட முயன்றபோது, காற்று வீசியதால், இது ஆபத்து என்பதை அவர் உணர்ந்து, பயிற்சியை மேற்கொள்ளவில்லை.
விடாமல் பயிற்சி
ஆனால், அவர் மறுத்த பிறகு, அன்றைய தினம் மட்டும் மேலும் 11 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டதாம்.
பேராசை
இதன்பிறகு நேற்று மீண்டும், உரிய அனுமதியின்றி பாரா சைலிங் நடத்தப்பட்டுள்ளது. அதில்தான் விபத்து ஏற்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் பலரும் இதில் பங்கேற்க வருவார்கள் என நினைத்து, ஒரு நபருக்கு ரூ.500 என்ற வீதத்தில் அதிக கட்டணம் வைத்து வசூலித்து, போட்டி நடத்தப்பட்டுள்ளது.