அதிமுக இணைப்பு: ஓபிஎஸ்- எடப்பாடி கோஷ்டிகள் நாளை மறுநாள் பேச்சுவார்த்தை!
அதிமுக இணைப்பு குறித்து ஓ.பன்னீர் செல்வம், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோஷ்டிகள் இடையே நாளை மறுநாள் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இதன் மூலம் அதிமுக பஞ்சாயத்துகளுக்கு முடிவு கட்டப்படும் என்று தெரிகிறது
சென்னை: அதிமுகவின் இரு கோஷ்டிகளும் இணைவது குறித்து ஓ.பன்னீர் செல்வம், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருக்கிடையே நாளை மறுநாள் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இதன் மூலம் முதல்வர், பொதுச் செயலாளர் ஆகிய பதவிகள் மீதான சர்ச்சை முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரட்டை இலையை மீட்பதற்காக அதிமுகவின் இரண்டு அணிகளும் இணைவதற்கு முடிவு செய்துள்ளன. அதற்கான பேச்சுவார்த்தை இன்று, நாளை என்று பல்வேறு காரணங்களால் இழுபறி நீடித்து வருகிறது.
சசிகலாவையும், தினகரனையும் கட்சியிலிருந்து ஒதுக்கி வைக்கிறோம் என ஓபிஎஸ் அணியின் நிபந்தனையின்பேரில் எடப்பாடி அணியினர் அறிவித்தனர். சசிகலா, தினகரனை அதிமுகவிலிருந்து ஒதுக்கி வைப்பதாக கிடைத்த அறிவிப்பு எங்களுக்கு கிடைத்த முதல் வெற்றி என்று ஓபிஎஸ் பேட்டி அளித்தார்.
ஜெயக்குமார்
இதைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயகுமார், அமெரிக்கா அதிபர் டிரம்பின் வெற்றிக்கே இவர்கள்தான் காரணம் என்பார்கள் போல என்று கருத்தை முன்வைத்தார். இதற்கு ஓபிஎஸ் கோஷ்டி ஜெயக்குமாரை வறுத்தெடுத்தது.
ஓபிஎஸ் நிபந்தனை
மேலும் அதிமுக அணிகள் இணைய பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமானால் முதல்வர் பதவியும், பொதுச் செயலாளர் பதவியும், 6 அமைச்சர் பதவிகளும் தங்களுக்கு வழங்க வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம் கோஷ்டி நிர்பந்திப்பதாக தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல் பகிரங்கமாக போட்டு உடைத்தார். அதேபோல் தம்பிதுரையும் முதல்வராக எடப்பாடியே நீடிப்பார் என்று தெரிவித்தார்.
வெகுண்டெழுந்த முனுசாமி
இதைத் தொடர்ந்து ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி தம்பிதுரையை கடுமையாக விமர்சித்தார். மேலும் பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டை போடவே இதுபோல் கீழ்த்தரமாக பேசுகின்றனர்; நாங்கள் வேண்டாமென்றால் ஒதுங்கிக் கொள்ளுங்கள், நாங்கள் மக்களை சந்தித்துக் கொள்கிறோம் என்றும் தெரிவித்தார்.
பம்மிய எடப்பாடி கோஷ்டி
இதுபோன்ற காரசாரமான கருத்துகளுக்கிடையே அதிமுக இணைய பேச்சுவார்த்தை நடப்பது சந்தேகமே என்கிற நிலைமை உருவானது. ஆனால் ஜெயக்குமார் பேசியதை பெரிதாக்க வேண்டாம் என்று எடப்பாடி கோஷ்டியினர் பம்மினர். இந்த நிலையில் டெல்லியில் அனைத்து மாநில முதல்வர்கள் கலந்து கொள்ளவுள்ள நிதி ஆயுக் மாநாட்டில் நாளை கலந்து கொள்ளவுள்ளதால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று இரவு டெல்லி செல்லவுள்ளார். அவர் அந்த மாநாட்டுக்கு பிறகு நாளை இரவு தமிழகம் திரும்புவார்.
நாளை மறுநாள் பேச்சு
இதைத் தொடந்து அதிமுக இணைப்பு குறித்து இரு கோஷ்டிகளின் பேச்சுவார்த்தை திங்கள்கிழமை நடக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக இணைந்தால் முதல்வர் பதவியும், பொதுச் செயலாளர் பதவியும் யாருக்கு என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது. அதற்கு முன்னதாக தமிழக அரசியல் நிலவரம், அதிமுக இணைவு ஆகியவை குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்வர் எடப்பாடி ஆலோசனை நடத்துவார் என்று தெரிகிறது. அதிமுகவின் உள்கட்சி பூசல்கள் நாளை மறுதினம் முடிவுக்கு வருமா அல்லது நிபந்தனைகள் விவகாரத்தில் பேச்சுவார்த்தை தோல்வியில் முடியுமா என்பது குறித்து தெரிந்து கொள்ள ஒரு நாள் பொறுத்திருக்க வேண்டும்.