கம்யூனிஸ்டுகளுடன் பேச்சு தொடர்கிறது.. முடிந்த பிறகுதான் சீட் - ஜெ. அறிவிப்பு
சென்னை: கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சு நடந்து வருகிறது. அது முடிந்த பிறகே அவர்களுக்கான தொகுதிகள் விவரம் அறிவிக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இன்று அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் அதிமுகவின் லோக்சபா தேர்தல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட ஜெயலலிதா செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டிருப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு ஜெயலலிதா பதிலளிக்கையில்,
ஜெயலலிதா மேலும் கூறுகையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தொகுதி உடன்பாடு ஏற்பட்ட பின்னர் இவ்விரு கூட்டணி கட்சிகளுக்கும், ஒதுக்கப்படும் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில் கழக வேட்பாளர்கள் திரும்பப் பெறப்படுவார்கள் என்றார்.
மேலும் அவர் கூறுகையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வரும் 3.3.2014 முதல் 5.4.2014 வரை தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்கிறேன். கழக வேட்பாளர்ளை ஆதரித்து சூறாவளி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளேன் என்றார் ஜெயலலிதா.
ஆளுக்கு எத்தனை கிடைக்கும்?
இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களுக்கு ஆளுக்கு 3 சீட் ஒதுக்க வேண்டும் என்று கோரி வருவதாக ஏற்கனவே தகவல் உள்ளது. ஆனால் அத்தனை கிடைக்குமா என்று தெரியவில்லை. ஆளுக்கு 2 கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள்.
மேலும் பல முக்கிய தொகுதிகளை, அதாவது கம்யூனிஸ்டுகளுக்குச் சாதகமான தொகுதிகளையும் அதிமுக தராது என்றும் பேச்சு அடிபடுகிறது. எனவே கம்யூனிஸ்டுகளுக்கான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை எப்போது முடியும் என்பது உறுதியாகத் தெரியவில்லை.
எனவே அதுவரை இந்த 40 வேட்பாளர்களும் தற்காலிகமாக சந்தோஷத்தில் மிதக்கலாம்...