நீதிமன்றத்தில் தமிழை ஆட்சி மொழியாக்குவதில் என்ன சிக்கல்? ராமதாஸ் சுளீர்
நீதிமன்றத்தில் தமிழை ஆட்சி மொழியாக்குவதில் என்ன சிக்கல் இருக்கிறது என்று பாமக தலைவர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: உயர்நீதிமன்றத்தின் வழக்காடும் மொழியாகத் தமிழை அறிவிப்பதில் எந்தச் சிக்கலும் இல்லை என்றாலும் மத்திய ஆட்சியாளர்களின் தமிழுக்கு எதிரான மனநிலைதான் சிக்கலாக இருக்கிறது என்று பாமக தலைவர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாகத் தமிழை அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி மதுரையில் 9 வழக்கறிஞர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
இவர்களின் போராட்டம் 9வது நாளாக இன்றும் தொடரும் நிலையில் போராட்டக்காரர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனாலும் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை. இதனைக் கண்டித்து பாமக தலைவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அலுவல் மொழித் தீர்மானம்
தமிழை வழக்காடும் மொழியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக எழுப்பப்பட்டு வருகிறது. முந்தைய திமுக ஆட்சியின் போது பாட்டாளி மக்கள் கட்சி கொடுத்த அழுத்தம் காரணமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக்குவதற்கான தீர்மானத்தை 06.12.2006 அன்று சட்டப்பேரவையில் அப்போதைய முதல்வர் கலைஞர் கொண்டு வந்து நிறைவேற்றினார். அப்போது உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த நீதியரசர் ஏ.பி.ஷா இம்முயற்சிக்குத் துணை நின்றார்.
என்ன சிக்கல்?
சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆட்சி மொழியாகத் தமிழை அறிவிப்பது சாத்தியமற்ற, கடினமான ஒன்றல்ல. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 348(2) ஆவது பிரிவின்படி உயர்நீதிமன்றத்தின் ஆட்சி மொழியாக இந்தி அல்லது சம்பந்தப்பட்ட மாநிலத்தின் மொழியை அறிவிக்க குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உண்டு. இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி அலகாபாத், பாட்னா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய உயர்நீதிமன்றங்களின் வழக்காடும் மொழியாக இந்தி அறிவிக்கப்பட்டுள்ளது. அதே வழியில் சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்காடும் மொழியாகத் தமிழை அறிவிப்பதில் எந்தச் சிக்கலும் இல்லை. மத்திய ஆட்சியாளர்களின் தமிழுக்கு எதிரான மனநிலை மட்டும் தான் இதற்குத் தடையாக உள்ளது.
இந்தி போல் தமிழும்..
நான்கு மாநிலங்களின் உயர்நீதிமன்றங்களுக்கு இந்தி ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டுள்ள போது, சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆட்சி மொழியாகத் தமிழை அறிவிப்பதில் என்ன சிக்கல் என்பதை மத்திய அரசு விளக்க வேண்டும். அதேநேரத்தில் தமிழை உயர்நீதிமன்றத்தின் ஆட்சி மொழியாக அறிவிக்கும் விஷயத்தில் தமிழக ஆட்சியாளர்கள் மத்திய அரசுக்கு போதிய அழுத்தம் தரவில்லை என்பதையும் மறுக்க முடியாது. இதுதொடர்பாக மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியதையும், கோரிக்கை மனு கொடுத்ததையும் தவிர தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் துரும்பைக்கூட கிள்ளிப்போடவில்லை.
பேச்சுவார்த்தை
தமிழை உயர்நீதிமன்ற ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் என்று உண்ணாநிலை மேற்கொண்டுள்ள மதுரை வழக்கறிஞர்களின் உடல்நிலை மோசமடைந்து வரும் நிலையில், அவர்களுடன் தமிழக அரசு பேச்சு நடத்தி போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். இதற்கெல்லாம் மேலாகத் தமிழை உயர்நீதிமன்ற ஆட்சி மொழியாக அறிவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.