3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு டிரான்ஸ்பர்: தேர்தல் ஆணையம் உத்தரவு
சென்னை: தமிழகத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணி புரியும் அரசு ஊழியர்களை இடமாற்றம் செய்ய தலைமை செயலாளருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அடுத்தாண்டு தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நடைபெறும் மாதம், தேதி உள்ளிட்ட எந்த விபரங்களும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், தமிழக கட்சிகள் தற்போதே கூட்டணிக்கான அஸ்திவாரத்தைப் போடத் துவங்கி விட்டன.
இது ஒருபுறம் இருக்க, தமிழக தேர்தல் ஆணையமும் சட்டசபைத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளைச் செய்யத் தொடங்கி விட்டது. தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த, தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி உள்ளிட்ட 3 ஆணையர்கள் வருகின்ற ஜனவரி மாத இறுதியில் தமிழகம் வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், தமிழக சட்டசபைத் தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடப்பதை உறுதிசெய்ய, 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப் பட்டுள்ளது.
வருகின்ற மே 31-ம் தேதியுடன் 3 ஆண்டுகள் பணி முடிப்போரும் இந்த இடமாற்றம் பட்டியலில் சேர்க்கப்படுவர். அதோடு, சொந்த மாவட்டத்தில் பணிபுரியும் அரசு அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல், கல்வி, வருவாய்த் துறையில் பணிபுரிவோரும் இந்த பட்டியலில் இடம்பெறுவர். இது தொடர்பான நடவடிக்கையை எடுக்கும்படி மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு ராஜேஷ் லக்கானி உத்தரவிட்டு உள்ளார்.
அதோடு, தமிழக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகளுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ள லக்கானி, ஜனவரி 20-ந்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் எனத் தெரிவித்துள்ளார். இந்த பட்டியல் வெளியான பின்பும் விடுபட்ட வாக்காளர்கள் பெயர் சேர்க்கவும் வாய்ப்பு வழங்கப்படும். இதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது.
வாக்காளர் பட்டியல் வெளியாவதால் 20-ந்தேதி வரை கலெக்டர் சூப்பிரண்டு, டி.ஐ.ஜி., ஆர்.டி.ஓ., தாசில்தார் மற்றும் தேர்தல் பணியில் சம்பந்தப்பட்ட யாரையும் இடமாற்றம் செய்ய முடியாது. அதற்கு தேர்தல் கமிஷனின் அனுமதி பெற வேண்டும். 20-ந்தேதிக்கு பிறகு யாரையும் இடமாற்றம் செய்து கொள்ளலாம். இதுபற்றி தேர்தல் கமிஷனின் உத்தரவை மேற்கொள் காட்டி தலைமை செயலாளர் ஞானதேசிகனுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.