சட்டசபையில் திமுகவிடமிருந்து ஜனநாயகத்தைக் காக்க நான் பட்டபாடு...: சபாநாயகர் தனபால்
சென்னை: தமிழக சட்டசபையின் நிறைவு நாளான நேற்று சபாநாயகர் தனபால் 31 நாட்கள் நடந்த சட்டசபைக் கூட்டத்தைக் குறித்து உரையாற்றினார். அப்போது, தன்னைப் பற்றி உண்மைக்கு மாறாக விமர்சிப்பதாகக் கூறி, திமுகவிற்கு தனது கண்டனங்களை அவர் தெரிவித்தார்.
கடந்த ஜனவரி மாதம் 30ம் தேதி தொடங்கிய தமிழக சட்டசபையின் எட்டாவது கூட்டத்தொடர் நேற்றோடு முடிவடைந்தது.
அதனையொட்டி, நேற்று சபாநாயகர் தனபால் சட்டசபையில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது :-
அலுவல்கள்...
தமிழக சட்டசபையில் நடந்த இந்த எட்டாவது கூட்டத் தொடரின்போது பேரவை நிறைவேற்றிய அலுவல்களை அறிவிக்கிறேன்.
31 நாட்கள்...
இப்பேரவையின் எட்டாவது கூட்டத் தொடரின் முதல் கூட்டம் ஜனவரி 30 அன்று தொடங்கி ஆகஸ்டு 12-ந் தேதிவரை (இடையில் வந்த தேர்தல் காலம் போன்ற நாட்களைத் தவிர்த்து) 31 நாட்கள் நடந்துள்ளன. 3 நாட்கள் மாலையிலும் சட்டசபை நடந்தது.
கூடுதல் நேரம்...
அவைக் கூட்டம் நடைபெற்ற மொத்த நேரம் 157 மணி 14 நிமிடம். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானங்களின்மீது விவாதத்தின்போது, ஆளும் கட்சியினரைவிட மற்ற கட்சியினருக்கு மூன்றரை மணி நேரம் கூடுதலாகத் தரப்பட்டது. முதலமைச்சர் ஜெயலலிதா பதிலுரை ஆற்றிய நேரம் 2 மணி 4 நிமிடமாகும்.
பட்ஜெட் தாக்கல்...
நிதித்துறை அமைச்சர் 13-2-14 அன்று பட்ஜெட் தாக்கல் செய்தார். அதில் 4 நாட்கள் விவாதித்து பதிலுரை அளிக்கப்பட்டது. இதிலும் விவாதத்தில் ஆளும் கட்சியினரை விட மற்ற கட்சியினருக்கு 6.15 மணிநேரம் கூடுதலாகத் தரப்பட்டது.
விவாதம்....
தற்போது மானியக் கோரிக்கைகள் மீதான விவாதமும் வாக்கெடுப்பும் 22 நாட்கள் நடைபெற்றன. அதில் 143 எம்.எல்.ஏ.க்கள் 49 மணி 11 நிமிடம் பேசினர். ஆளுங்கட்சியினர் 39 பேர் 9 மணி 32 நிமிடம் பேசினர். மற்ற கட்சியினர் 104 பேர் 39 மணி 39 நிமிடம் பேசினர்.
ஜெயலலிதா பதில்...
காவல் துறை சம்பந்தமாக முதலமைச்சர் ஜெயலலிதா ஒரு மணி 37 நிமிடங்கள் பதிலளித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் விவாதத்தின் இடையில் எம்.எல்.ஏ.க்களுக்கு அவர் 27 முறை, 53 நிமிடம் விளக்கமளித்துள்ளார். மற்ற அமைச்சர்கள் பதிலுரையாற்றிய மொத்த நேரம் 28 மணி 9 நிமிடம்.
தி.மு.க.வுக்கு கண்டனம்...
தி.மு.க. உறுப்பினர்கள் வெளியே பொதுக் கூட்டங்களை நடத்தி சட்டமன்ற நடவடிக்கைகளை உண்மைக்குப் புறம்பாக விமர்சிக்கின்றனர். அவர்களும், அவர்களது கட்சியின் தலைவரும், பேரவையின் நடவடிக்கைகளை முறையாகவும், இடையூறுகள் இன்றியும் நடத்தவேண்டிய பொறுப்பில் உள்ள பேரவைத் தலைவரைப் பற்றி உண்மைக்கு மாறாக விமர்சித்து பேரவைக்கு வெளியே பேசி வருகின்றார்கள்.
ஜனநாயகத்தை காப்பாற்ற...
அரசியல் லாபத்திற்காகவும், மலிவான விளம்பரத்திற்காகவும் தினமும் கேள்வி நேரம் முடிந்த பின்னர் அவைக்கு வந்து, தேவையற்ற செயல்களில் ஈடுபடுவதை அக்கட்சியினர் வாடிக்கையாகக் கொண்டிருந்தனர். இப்பேரவையில் ஜனநாயகத்தைக் காப்பாற்ற நான் பட்டபாடு எல்லோரும் அறிந்தவைதான்.
நன்மதிப்பைக் குறைக்கும் செயல்...
வெளியேற்றப்பட்டதை ஒரு அரசியல் பிரச்சினையாக்கி, சுய லாபத்திற்காக, பொதுக் கூட்டங்களை நடத்தி, பேட்டிகள் அளித்து, சட்டமன்றத்திற்குள்ள நன்மதிப்பைக் குறைக்கும் வகையில் உண்மைக்கு மாறான பிரச்சாரத்தை அக்கட்சியினர் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.
மற்ற கட்சிக்கு வாய்ப்பு அதிகம்...
அவையில் உரையாற்றக் கூடிய உறுப்பினர்களில் சுமார் 57 சதவீதமுள்ள ஆளுங்கட்சிக்கு 57 சதவிகித வாய்ப்புகளும், நேரமும் வழங்கப்படவேண்டும். ஆனால் 27.22 சதவீத வாய்ப்பும், 19.02 சதவீத நேரமும்தான் வழக்கப்பட்டுள்ளது. 73 சதவீத வாய்ப்பும், 81 சதவிகித நேரமும் எதிர்க்கட்சியினருக்குத்தான் வழங்கப்பட்டிருக்கின்றன. எனவே சிலர் தங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று கூறுவது மிகவும் வருந்தத்தக்கது.
எடப்பாடி பழனிச்சாமி அதிக பதில்...
இந்த கூட்டத் தொடரின்போது அவையில் விடையளிக்கப்பட்டவை வினாக்கள் 387. மொத்த துணை வினாக்கள் 865. எம்.எல்.ஏ.க்கள் கேள்விகளுக்கு அவையில் அதிக அளவு விடையளித்த அமைச்சர்களில் முதல் ஐந்து நிலைகளில் இருப்பவர்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி., மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்ட அமைச்சர் வளர்மதி, கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் சின்னையா, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் ஆகியோராகும்.
தவறாமல் வந்த எம்.எல்.ஏ.க்கள்
இந்த கூட்டத் தொடரின் அனைத்து நாட்களிலும் அண்ணாதுரை, இந்திராகாந்தி, கணிதா சம்பத், கலைராஜன், செங்கோட்டையன், செல்வி ராமஜெயம், நயினார் நாகேந்திரன், வெங்கட்ராமன், ஜெயசுதா, நான்சி உட்பட 104 எம்.எல்.ஏ.க்கள் வந்தனர்' என இவ்வாறு அவர் தனது உரையில் தெரிவித்தார்.