லேட்டாக புறப்படுவதாக கூறி முன்கூட்டியே புறப்பட்ட தமிழ்நாடு எக்ஸ்பிரஸ்- 200 பயணிகள் அவதி
சென்னை: சென்னையிலிருந்து, டெல்லி செல்லும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் நேர மாற்றம் குறித்து எழுந்த குளறுபடியால் 200க்கும் மேற்பட்ட பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று இரவு டெல்லி செல்லும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் 5 மணி நேரம் தாமதமாகப் புறப்படும் என்று பயணிகளுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், அப்படி இல்லாமல், அந்த ரயில் சரியான நேரத்தில் அதாவது நேற்றிரவு 10 மணிக்கே புறப்பட்டு போய் விட்டது. ரயில் லேட்டாகும் என்று வந்த செய்தியால் 200 க்கும் மேற்பட்ட ரயில் பயணிகள் தாமதமாக வந்தனர். ஆனால் வந்து பார்த்தபிறகுதான் ரயில் புறப்பட்டுப் போயிருந்தது தெரிய வந்து பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இரவு 10 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில் 5 மணி நேரம் தாமதமாக ஆதாவது இன்று காலை 3 மணிக்கு புறப்படும் என்று செல்போனில் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டிருந்ததாக பயணிகள் குற்றம் சாட்டினர்.
இது குறித்து நிலைய துணை மேலாளர் பாஸ்கரிடம் கேட்டபோது, இன்று காலை 6.40 க்கு டெல்லி புறப்படும் துரந்தோ ரயிலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இடம் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்தார். இச்சம்பவம் சென்னையில் ரயில் பயணிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications