தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும்... ஸ்டாலினை சந்தித்த பின் கூறிய திருமாவளவன்
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றும் பாஜக ஒருபோதும் ஆட்சியில் அமர வாய்ப்பு இல்லை என்றும் விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
சென்னை: தமிழகத்தில் மதவாத, சாதியவாத சக்திகளுக்கு இடமில்லை என்று கூறியுள்ள திருமாவளவன், விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை, திருமாவளவன் சந்தித்துப் பேசினார். செப்டம்பர் 17ம் தேதி சென்னை ராயப்பேட்டையில் நடைபெற உள்ள விசிக மாநில சுயாட்சி மாநாட்டில் பங்கேற்க ஸ்டாலினுக்கு திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார். இந்த மாநாட்டில் ஸ்டாலின் சிறப்புரையாற்றுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், இந்த சந்திப்பை தேர்தல் அரசியலோடு முடிச்சுப்போட்டு பார்க்க வேண்டாம் என்று கூறினார்.
நீட் விவகாரத்தில் தமிழக அரசு இருவிதமான நிலைப்பாட்டில் இருப்பதாகவும், மாநிலங்களின் உரிமையை பறிக்கும் செயலில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் திருமாவளவன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது, ஆனால் அந்த மாற்றம் பாஜகவினால் ஏற்பட வாய்ப்பு இல்லை.
தமிழகம் திராவிட இயக்கங்களால் பாதுகாக்கப்பட்ட மண். இங்கு மதவாத, சாதியவாத சக்திகளுக்கு இடமில்லை என்றும் திருமாவளவன் கூறினார்.
முரசொழி பவளவிழாவில் திருமாவளவன் பங்கேற்று பேச உள்ள நிலையில் விசிக மாநாட்டில் பங்கேற்க ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஒத்த கருத்துடைய கட்சிகளுக்கு அழைப்பு தருவோம் என்று கூறியுள்ளார் திருமாவளவன். வைகோ, விஜயகாந்த் ஆகியோரையும் திருமாவளவன் அழைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.