மழைக்காலம் போயிருச்சு… அடிக்குது குளிரு… இனி வெயிலும் பட்டையை கிளப்புமாம்!!
சென்னை: வட கிழக்கு பருவ மழை தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதியில் நிறைவடைந்துவிட்டது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதிகாலையிலும் இரவிலும் குளிர் காற்று அடித்தாலும் வரும் நாட்களில் தமிழகத்தில் வெயில் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த அக்டோபர் 20ஆம் தேதி முதல் வட கிழக்கு பருவமழை பெய்யத்தொடங்கியது. ஆண்டுதோறும் பெய்யும் இயல்பு மழையைவிட இந்த ஆண்டு 15 சதவீதம் குறைவாக பெய்துள்ளது.
கடந்த வாரம் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியினால் ஓரளவுக்கு மழை பெய்யும் என்று எதிபார்க்கப்பட்ட நிலையில் அதுவும் வலுவிழந்து போனது. இதனால் இந்த ஆண்டுக்கான வட கிழக்கு பருவமழை குறையத் தொடங்கி தற்போது முடிவுக்கு வந்துவிட்டது.
மழை எவ்வளவு?
வட கிழக்கு பருவ மழைக் காலத்தில் தமிழகத்தில் சராசரியாக 44.04 செ.மீ. மழை பெய்யும். இந்த ஆண்டு மாநிலத்தின் சராசரி மழை அளவு 43.03 செ.மீ. ஆக பதிவாகியுள்ளது. புதுச்சேரியில் 91.56 செ.மீ. மழை சராசரியாக பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 75.18 செ.மீ. மழைதான் பதிவானது.
மழைக்காலம் முடிந்தது
வடகிழக்கு பருவ மழை முழுமையாக முடிவடைந்துவிட்ட நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இனி வரும் நாட்களில் வெயில் அதிகரிக்கும் என்றும் மழை இல்லாத வறண்ட வானிலை நிலவும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பனிப்பொழிவு
இந்நிலையில் கடல் பரப்பிலும், வளி மண்டல மேல் அடுக்கிலும் ஈரப்பதம் அதிகரித்துள்ளதால் பனிப்பொழிவு தொடங்கியுள்ளது.
கடல் பரப்பில் இருந்து தரை நோக்கி கடுங் குளிர் காற்று வீசுவதால் தரைப்பகுதியில் மூடுபனி நிலவுகிறது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு இந்த மூடுபனி இருக்கிறது.
மூடுபனி
சூரிய உதயத்துக்கு பிறகு காலை 9 மணி வரையும் இந்த மூடுபனி நீடிப்பதால் வாகனங்கள் செல்வதில் பிரச்னை உள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.
இரவில் கடுங்குளிர்
தற்போது மழை முடிவுக்கு வந்த வறண்ட வானிலையே காணப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இரவு நேரங்களில் கடல் பகுதியில் இருந்து தரை நோக்கி குளிர் காற்று வீசும். இரவில் குளிர் அதிகமாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.