உடல்நிலை குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி.... தலைமைச் செயலகம் வந்தார் முதல்வர் ஜெ.
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா 11 தினங்களுக்குப் பின்னர் இன்று தலைமைச் செயலகத்துக்கு வருகை தந்தார். அவரை அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும் வரவேற்றனர். உடல்நலம் குறித்து பரவிய வதந்திகளுக்கு இதன்மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற ஜெயலலிதா கடந்த 4ஆம் தேதி எம்.எல்.ஏ.வாக பதவியேற்க தலைமைச் செயலகம் சென்றிருந்தார். அதன் பின்னர் அவர் இதுவரை தலைமைச் செயலகத்திற்கு செல்லவில்லை.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசு தேர்வு வாரியம் மூலம் தேர்வான கலை மற்றும் அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர்கள் 1,016 பேருக்கு தலைமைச் செயலகத்தில் 13ம் தேதி திங்கள்கிழமை பிற்பகலில் ஜெயலலிதா பணி நியமன ஆணைகளை வழங்குவார் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் சார்பில் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. மேலும், பள்ளி மாணவிகளுக்கு மிதிவண்டிகளையும் வழங்குவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சிகளுக்கு உயர்கல்வித்துறை மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 9 நாட்களுக்கு பிறகு ஜெயலலிதா தலைமைச் செயலகம் வர இருந்ததையொட்டி, கலங்கரை விளக்கம் முதல் தலைமைச் செயலகம் வரை நடை பாதைகளை அடைத்து கடற்கரை சாலைகளில் இருபுறமும் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. ஆனால் நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறவில்லை திடீரென்று ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து செய்தியாளர்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டபோது, உரிய பதில் ஏதும் கிடைக்கவில்லை.

11 நாட்களுக்குப் பிறகு
இந்த நிலையில் இன்று ஜெயலலிதா தலைமைச் செயலகத்திற்கு வருகிறார் என்றும், தமிழக அரசின் பல்வேறு நலத்திட்ட பணிகளை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார் என்றும் செய்தி வெளியிடப்பட்டது. எனவே முதல்வரை வரவேற்கும் விதமாக தமிழக அமைச்சர்கள் போயஸ் கார்டன், ராதாகிருஷ்ணன் சாலை மற்றும் காமராஜர் சாலைகளின் இருபுறமும் நடைபாதைகளை அடைத்து பேனர்கள் வைக்கப்பட்டது. இதனையடுத்து ஜெயல்லிதா இன்று தலைமைச் செயலகத்திற்கு காலை 11 மணிக்கு வந்தார். அவரை அமைச்சர்கள் வரவேற்றனர்.

நியமன ஆணைகள்
முதல்வர் ஜெயலலிதா அவரது அறைக்கு சென்று பணிகளை தொடங்கினார். தமிழ்நாடு அரசு தேர்வு வாரியம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட கலை மற்றும் அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

மாணவர்களுக்கு சைக்கிள்
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவியருக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

பால் பவுடர் தொழிற்சாலை
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே அம்மாபாளையத்தில் 39.52 ஏக்கர் பரப்பளவில் 72 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பில் நாளொன்றுக்கு 2 லட்சம் லிட்டர் பால் பதப்படுத்துதல் மற்றும் 20 மெட்ரிக்டன் பால் பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலையை திறந்து வைத்தார்.

பால் பதப்படுத்தும் தொழிற்சாலை
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுக்கா, பாடாலுரில் 23.61 ஏக்கர் பரப்பளவில் 36 கோடியே 28 லட்சம் மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 1 லட்சம் லிட்டர் பால் பதப்படுத்த பால்பண்ணை நிறுவுதல்.சென்னை, நந்தனத்தில் 1 லட்சம் சதுர அடி பரப்பளவில் 31 கோடியே 29 லட்சம் மதிப்பீட்டில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் நுகர்வோர் நல மையம் மற்றும் நிர்வாக அலுவலகம் நிறுவுதல்.திருத்தி அமைக்கப்பட்ட பேரறிஞர் அண்ணா பால் உற்பத்தியாளர்கள் நலநிதி திட்டத்தின் கீழ் 49 பயனாளிகளுக்கு 85 லட்சம் 75 ஆயிரம் வழங்குதல் ஆகியவற்றை இன்று காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இ- சேவை மையங்கள்
அரசை தேடி மக்கள் என்ற நிலை மாறி, மக்களை தேடி அரசு என்பதற்கிணங்க, தகவல் தொழில்நுட்பவியல் துறை சார்பில், 4 கோடியே 12 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 151 இ-சேவை மையங்களை இன்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். மேலும் பல்வேறு நலத் திட்ட பணிகளை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

வதந்திக்கு முற்றுப்புள்ளி
முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து சமூக தளங்களில் சில தகவல்கள் வெளியாகின. அது குறித்து எதிர்க்கட்சிகளும் கேள்வி எழுப்பியிருந்தன. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த நிலையில், 11 நாட்களுக்குப் பிறகு, ஜெயலலிதா இன்று தலைமைச் செயலகத்துக்கு வருகை தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications