32 தமிழர்களை விடுவிக்க முடியாது என திமிராக பேசுவதா? சந்திரபாபு நாயுடுவுக்கு வேல்முருகன் 'வார்னிங்'
சென்னை: ஆந்திராவில் செம்மரம் கடத்தல்காரர்கள் எனகூறி கைது செய்யப்பட்டுள்ள 32 தமிழர்களை விடுவிக்க முடியாது என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளதற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 32 தமிழர்களை விடுவிக்காவிட்டால் தமிழகத்தில் ஆந்திர பேருந்து, ஆந்திர நிறுவனங்கள் முன்பு போராட்டம் வெடிக்கும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஆந்திராவுக்கு கூலி வேலைக்குச் சென்ற 32 அப்பாவி மலைவாழ் தமிழர்களை 'செம்மரக் கடத்தல்காரர்கள்' எனக் கூறி ஆந்திரா அரசு கைது செய்து அட்டூழியம் செய்தது. ஆந்திராவின் இந்த தான்தோன்றித் தனத்துக்கு ஒட்டுமொத்த தமிழகமே கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது.
தமிழக முதல்வர் 32 தமிழரை உடனே விடுதலை செய்ய வலியுறுத்தி ஆந்திரா முதல்வருக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார். இந்த நிலையில் ஆந்திராவின் சித்தூர் மாவட்டம் குப்பத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, 32 தமிழரை விடுதலை செய்யவே முடியாது என திமிராகப் பேசியுள்ளார்.
அத்துடன் 32 பேரும் நல்லவர்கள் என்று யாரும் நியாயப்படுத்த முடியாது; அவர்கள் செம்மரக் கடத்தல்கார்களே என்றும் கூறி தமிழர் நெஞ்சத்தில் வேதனையை ஏற்படுத்தியுள்ளார். கூலிக்காக சென்ற பிள்ளைகளும் கணவன்மாரும் வீடு திரும்புவார்கள் என்று மலை கிராமங்களில் காத்துகிடக்கும் குடும்பங்களின் தலையில் பேரிடியை தூக்கிப் போட்டுள்ள சந்திரபாபு நாயுடுவின் இந்த திமிரானப் பேச்சை தமிழக வாழ்வுரிமைக் கட்சி மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறது.
தமிழக அரசின் முன் முயற்சியில் தற்போது 32 தமிழருக்கும் ஜாமீன் கோரப்பட்டுள்ளது. சந்திரபாபு நாயுடுவின் இந்த பேச்சால் அவர்கள் ஜாமீன் மறுக்கப்படும் அபாயம் உள்ளது. இது தமிழகம்- ஆந்திரா இடையேயான உறவை அடியோடு நாசமாக்கிவிடும் என எச்சரிக்கிறோம்.
ஏற்கனவே பாலாற்றை கபளீகரம் செய்து தமிழக விவசாயிகளின் வயிற்றிலடித்துக் கொண்டிருக்கிறார் சந்திரபாபு நாயுடு. இப்போது தமிழர்களை செம்மரக் கடத்தலின் பெயரால் வேட்டையாடுவாராம்... தமிழர்கள் நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்போமா?
32 தமிழர்களையும் ஆந்திரா அரசு விடுதலை செய்யாவிட்டால் நிச்சயம் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்; தமிழகத்தில் ஆந்திரா அரசு பேருந்துகளும், ஆந்திரா நிறுவனங்களும் எங்களது போராட்டங்களை சந்திக்கும் சூழ்நிலையை எங்கள் வலியின் வெளிப்பாடாக உணர்த்துவோம் என்பதை எச்சரிக்கையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.