ரூ.30 ஆயிரம் கோடி வருவாய் அளிக்கும் திட்டங்கள்... தமிழக அரசுக்கு தமிழருவி ஐடியா
ஆற்று மணல், தாது மணல், கிரானைட் கற்கள் ஆகியவற்றை தமிழக அரசே விற்பனை செய்தால் ரூ.30 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும் என்று காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்தார்.
திருப்பூர்: தமிழகத்தில் விற்பனை வரியை முறையாக வசூலிக்க வேண்டும் என்று காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் ஊழல், மதுவிலக்கு ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் தமிழருவி மணியன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து திருப்பூரில் அவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், தமிழகத்தில் விற்பனை வரியை 100 சதவீதம் முழுமையாக வசூலிப்பதில்லை.விற்பனை வசூலை முறைப்படுத்த வேண்டும். ஆற்று மணல், தாது மணல், கிரானைட் ஆகியவற்றை அரசே விற்பனை செய்ய வேண்டும்.
மதுவிலக்கு பிரச்சினை
இதன் மூலம் ரூ.30 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும். மதுவிலக்கை அரசியல் கட்சிகள் கையெடுக்க தொடங்கும் என்று நான் கூறியதை போல் கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் மதுவிலக்கு பிரச்சினையை கையில் எடுத்தன.
1000 கடைகள் மூடல்
தமிழகத்தில் மொத்தம் 6800 மதுபானக் கடைகள் உள்ளன. தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி ஜெயலலிதா முதல்வரானவுடன் முதல் கையெழுத்தாக தமிழகத்தில் உள்ள 500 மதுக்கடைகளை மூடுவது என்றுபதை செயல்படுத்தினார். அதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமியும் மேலு்ம 500 கடைகளை மூடினார்.
4000 கடைகள் மூடல்
இந்நிலையில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளை மூட வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகத்தில் 4000 கடைகள் மூடப்பட்டன. அவ்வாறிருக்க மீதமுள்ள 2,700 கடைகளை மூடி பூரண மதுவிலக்கை கொண்டு வருவதில் தமிழக அரசுக்கு என்ன பிரச்சினை உள்ளது.
லோக் ஆயுக்தா எப்போது
எங்கள் இயக்கத்தின் யோசனையை கேட்டிருந்தால் தமிழக அரசுக்கு ரூ.50 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்திருக்கும். கேரளம், ஆந்திரம், ஓடிஸா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் லோக் ஆயுக்தா அமலில் உள்ளது. ஊழலை தடுத்து நிறுத்துவதற்கான இந்த லோக் ஆயுக்தாவை தமிழகத்தில் கொண்டு வருவதற்கான சட்டபூர்வமான நடவடிக்கைகளை தமிழக அரசு செய்யவில்லை.
காமராஜர் பிறந்தநாளுக்குள்...
காமராஜரின் பிறந்த நாளான ஜூலை 15-ஆம் தேதிக்குள் மதுவையும், ஊழலையும் தமிழக அரசு வேரறுக்க வேண்டும். இல்லையெனில் காந்திய மக்கள் இயக்கம் சார்பில் விழிப்புணர்வு உருவாக்க வேண்டியிருக்கும். ஊழலை ஒழிக்க தேவதூதன் வருவாரா என்ற எதிர்பார்ப்பில் தமிழகம் உள்ளது. அதிமுக இரு அணிகளாக பிளவுப்பட்டு ஜெயலலிதா என்ற ஆளுமை இல்லாததால் திசை மாறி பயணித்து கொண்டிருக்கிறது.
தக்கவைக்க முடியாது
எம்ஜிஆரால் வளர்க்கப்பட்டு, ஜெயலலிதாவால் கட்டிக் காக்கப்பட்ட அதிமுகவை தக்க வைத்துக் கொள்ள இவர்களால் முடியாது. எனவே ஊழலற்ற ஆட்சியையும் தரமுடியாது. ஸ்டாலினின் அரசியலில் பக்குவம், முதிர்ச்சி உள்ளது. ஊழலை ஒழிக்க திமுகவால்தான் முடியும் என்று ஸ்டாலின் கூறும்போது அவருடன் இருக்கும் துரைமுருகன், நேரு, எ.வ.வேலு, பொன்முடி ஆகியோரின் முகங்கள் மாறுவதை நம்மால் காணமுடிகிறது என்றார் தமிழருவி மணியன்.