தமிழருவி மணியனுக்கு தொடரும் கொலை மிரட்டல்
சென்னை: காந்திய மக்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவர் தமிழருவி மணியனுக்கு தொடர் கொலை மிரட்டல் வருவதாக கூறப்படுகின்றது.
மத்தியில் காங்கிரசை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும், தமிழகத்தை திராவிடக் கட்சிகளிடம் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கூறி, தமிழகத்தில் பாஜக தலைமையிலான கூட்டணியில் மதிமுகவையும், தேமுதிகவையும் கொண்டு வரும் பணியில் ஈடுபட்ட பெருமை தமிழருவி மணியனையே சாரும். தமிழகத்தில் திமுக, அதிமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு மாற்றாக பாரதிய ஜனதா அணி உருவாகியுள்ளது.
மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு காந்திய மக்கள் இயக்கத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் மதுரை ஆண்டாள்புரத்தில் நடைபெற்றது.
அப்போது இந்த இயக்கத்தின் நிறுவனத் தலைவர் தமிழருவி மணியன் தலைமை தாங்கி திமுக தோற்கடிக்கப்பட்டால் தமிழக அரசியலில் ஒரு வெற்றிடம் ஏற்படும். அதை நிரப்ப மற்றவர்களை எதிர்பார்த்திராமல் நாமே அரசியல் கட்சியாக மாறுவோம். இயக்கமாக இருந்து கொண்டிருப்பதை விட ஆட்சி அதிகாரத்தில் இருந்தால் தான் மக்களின் தேவைகளை சட்டமாக்க முடியும் என்று கூறி, காந்திய மக்கள் இயக்கத்தை காந்திய மக்கள் கட்சியாக மாற்றப் போவதாக அறிவித்தார்.
மேலும், 2014 மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணிக்கு ஆதரவு என்றும், தேர்தல் பிரச்சாரம் செய்யப் போவதாகவம் அறித்தார்.
இந்த நிலையில் தமிழருவி மணியன் செல் போனுக்கும், அவரது வீட்டு தொலைபேசி எண்ணுக்கும் கடந்த சில நாட்களாகவே மர்ம தொலைபேசி எண்ணில் இருந்து அவருக்கு கொலை மிரட்டல் வந்த வண்ணம் உள்ளதாம்.
இந்த தகவல் அறிந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோர் தமிழருவி மணியனுக்கு ஆறுதல் கூறியுள்ளனர்.
மேலும், இந்த கொலை மிரட்டல் போன் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கக் கோரி அவரது அபிமானிகள் வற்புறுத்தி வருகின்றனர். ஆனால் மணியன் பிடிவாதமாக காவல் நிலையத்தில் புகார் அளிக்காமல் காந்திய வழியில் செல்வதாக கூறுகின்றனர்.