ஒண்டிக்கு ஒண்டி நிற்கலாமா... காங்கிரஸுக்கு சவால் விடும் தமிழிசை
சென்னை: திமுகவுடன் கூட்டணி சேர்ந்தும் கூட வெறும் 8 இடங்களில்தான் காங்கிரஸ் வென்றுள்ளது. ஆனால் தனித்துப் போட்டியிட்டும் கூட எங்களது வாக்கு வங்கியை நாங்கள் பலப்படுத்தியுள்ளோம் என்று தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை கூறியுள்ளார். மேலும் தைரியம் இருந்தால் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடத் தயாரா என்றும் அவர் சவால் விட்டுள்ளார்.
சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் தமிழிசை. அப்போது அவர் கூறுகையில்,
தஞ்சாவூர், அரவக்குறிச்சியில் தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்து தள்ளி வைத்துள்ளது. இது வரவேற்கத்தக்க நடவடிக்கைதான். ஆனால் இதை காங்கிரஸ் கட்சி எதிர்த்துள்ளது. இந்த எதிர்ப்புக்குக் காரணம் என்ன என்று தெரியவில்லை. ஒரு வேளை அங்கு பணப்பட்டுவாடா நடந்தது உண்மைதான் என்று காங்கிரஸ் ஆமோதிக்கிறதா, அதை ஆதரிக்கிறதா என்பதை அதுதான் விளக்க வேண்டும்.
திமுகவின் தோல்விக்கு காங்கிரஸ் கட்சியுடன் அக்கட்சி வைத்த கூட்டணிதான் காரணம். காங்கிரஸ் கட்சிக்கு தேவையில்லாமல் 41 இடங்களைக் கொடுத்தது திமுக. ஆனால் வென்றதோ 8 இடங்களில் மட்டுமே.
ஆனால் நாங்கள் தனித்துப் போட்டியிட்டோம். தோல்வி அடைந்தாலும் கூட எங்களது வாக்கு சதவீதம் அதிகமாகவே ஆகியுள்ளது. உள்ளாட்சித் தேர்தலிலும் நாங்கள் தனித்துப் போட்டியிடத் தயாராகவே இருக்கிறோம்.
காங்கிரஸ் கட்சிக்குத் தைரியம் இருந்தால் எங்களைப் போல தனித்துப் போட்டியிட வேண்டும். அவர்கள் தயாரா. வெற்றி பெற்றுக் காட்டட்டுமே.
மத்தியில் மோடி அரசின் தோல்விகள் பற்றி புத்தகங்களையும், சிடிக்களையும் காங்கிரஸ் வெளியிட்டு வருகிறது. ஏன், அவர்கள் அவர்கள் ஆட்சி செய்த 10 ஆண்டுகளில் செய்த சாதனைகள் ஏதாவது இருந்தால் அதனை புத்தகமாகவும், சிடிக்களாகவும் வெளியிட வேண்டியது தானே?.
தமிழகத்தில் தனியார் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மக்களுக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதைக் கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார் தமிழிசை.