மெர்சல் திரைப்படத்திலிருந்து ஜிஎஸ்டி பற்றிய வசனங்களை நீக்க வேண்டும்.. தமிழிசை எச்சரிக்கை
சென்னை: விஜய் நடித்துள்ள மெர்சல் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள ஜிஎஸ்டி குறித்த வசனங்களை நீக்க வேண்டும் என்று பாஜகவின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள மெர்சல் திரைப்படத்தில், ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா போன்ற மத்திய அரசின் திட்டங்களுக்கு எதிரான வசனங்கள் இடம் பிடித்துள்ளன.
'எங்க ஊரில் பணமேயில்லை, எல்லாம் டிஜிட்டல்தான். ஒரே கியூதான்' என்று கிழிந்த பர்சை வடிவேலு கதாப்பாத்திரம் காட்டுவது, 'என்ன இந்த ஐநூறு ரூபாயும் செல்லாதுன்னு சொல்லிட்டாங்களா' என்பது போன்ற வசனம் ஆகியவை மெர்சல் படத்தில் இடம் பெற்றுள்ளது.

விஜய் பஞ்ச்
சிங்கப்பூரில் ஜிஎஸ்டி வரி குறைவாக இருப்பதாகவும், 28 சதவீதம் ஜிஎஸ்டி வசூலிக்கும் இந்தியாவில் இலவச மருத்துவ உதவிகள் அனைவருக்கும் கிடைப்பதில்லை என்றும் விஜய் பஞ்ச் பேசும் காட்சிகளும் படத்தில் இடம் பெற்றுள்ளன.

தமிழிசை எச்சரிக்கை
மத்திய அரசு திட்டங்களுக்கு எதிராக காட்சிகள் உள்ள நிலையில், தமிழிசை இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். திருவெற்றியூரில் இன்று நிலவேம்பு கசாயம் வினியோகம் செய்த பிறகு நிருபர்களிடம் பேசிய அவர், விஜய் நடித்துள்ள 'மெர்சல்' படத்தில் இடம் பெற்றுள்ள ஜி.எஸ்.டி. வரி பற்றிய காட்சிகளை நீக்காவிட்டால் வழக்கு தொடரப்படும் என்றார்.

அரசியலில் விஜய்
அரசியலுக்கு வருவதற்காக விஜய் தவறான தகவல்களை பரப்பிவருகிறார் என்றும் தமிழிசை தெரிவித்தார். விஜய் அரசியலுக்கு வர உள்ளதாக தமிழிசை ஆரூடம் தெரிவித்துள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.

இருவேறு கருத்துக்கள்
இதனிடையே சோஷியல் மீடியாவில் விஜய் டயலாக்கிற்கு ஆதரவாகவும், விமர்சித்தும் கருத்துக்கள் பகிரப்படுகின்றன. சிங்கப்பூர் பல நீண்ட ஆண்டுகளாக கடும் சீர்திருத்தங்களுக்கு பிறகு இந்த நிலைக்கு வந்துள்ளதாகவும், ஜிஎஸ்டி இந்தியாவுக்கு வந்தே 100 நாட்கள் ஆகியுள்ளதாகவும் அரசு ஆதரவாளர்கள் டிவிட் செய்தால், விஜய் பேசியது ஆக்கப்பூர்மாக உள்ளது என எதிர் தரப்பினரும் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications